Tamilnadu

மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்த அ.தி.மு.க எம்.எல்.ஏ : குழப்பத்தில் மக்கள்!

பெரம்பலூர் அரணாரை கிராமத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள பகுதி நேர நூலக கட்டிடம் திறப்பு விழா நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற குன்னம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ வும் - அ.தி.மு.க. பெரம்பலூர் மாவட்ட செயலாளருமான ஆர்.டி.ராமச்சந்திரன் பேசுகையில், மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறேன். ஆனால் இந்தி திணிப்பை எப்போதும் எதிர்ப்பேன். தமிழகத்தில் மும்மொழி கொள்கையை அரசியல் லாபம் கருதிதான் அனைத்து அரசியல் கட்சியும் எதிர்க்கிறது. மேலும், அரசுப் பள்ளிகளில் ஹிந்தி பாடம் அவசியம் என்று வலியுறுத்தினார்.

அ.தி.மு.க. உட்பட அனைத்து அரசியல் கட்சியினரும் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து வரும் நிலையில், குன்னம் தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மேலும், தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் தொடரும் என முதல்வர் தொடங்கி அமைச்சர்கள் வரை கூறிவந்த நிலையில் அதே கட்சியை சேர்ந்த ஒருவர் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்திருப்பது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க-விற்கு இரட்டை தலைமை கூடாது, ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று கடந்த மாதம் கருத்து வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிலையில் தற்போது மீண்டும் அவர் பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது குறிப்பிடதக்கது.