Tamilnadu

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் நிதி.. இல்லையெனில் ‘கட்’ - மத்திய அரசு திட்டவட்டம்!

கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷன் என இந்த மூன்றை மட்டுமே இலக்காகக் கொண்டு தமிழக அரசும், உள்ளாட்சித் துறை அமைச்சரும் செயல்பட்டு வருகின்றனர். அமைச்சர் வேலுமணியின் உறவினர்களுக்கும், முதலமைச்சர் பழனிசாமியின் உறவினர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள டெண்டர்களால் உள்ளாட்சி அமைப்புகள் எவற்றையும் புதுப்பிக்காமல் பல்வேறு காரணங்களை கூறி உள்ளாட்சித் தேர்தலை தட்டிக்கழித்து வருகிறது அ.தி.மு.க அரசு.

அது மட்டுமல்லாமல் , தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் நிச்சயம் தி.மு.க-வே வெற்றி பெறும் என அ.தி.மு.க-வினருக்கு நம்பிக்கை உள்ளது. எனவே, தோல்வி பயத்தின் காரணமாகவும் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவிடாமல் மாநில தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து அவ்வப்போது வார்டு வரையறை என்ற பெயரில் உள்ளே வெளியே ஆட்டத்தை ஆடி வருகின்றனர்.

உள்ளாட்சித் தேர்தலை நடத்தச் சொல்லி தி.மு.க சார்பில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. அதற்கு அரசுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் பல முறை கெடு விதித்தும் தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால் மாநிலம் முழுவதும் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய உள்ளாட்சி அமைப்புகள் முடங்கியுள்ளன.

இதற்கிடையில், அக்டோபர் மாதம் இறுதிவரை உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாது என உச்சநீதிமன்றத்தில் மாநில அரசும், தேர்தல் ஆணையமும் கால அவகாசம் கேட்டுள்ளது. இதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மக்களவையில் பேசிய தி.மு.க எம்.பி. ஆ.ராசா, வேண்டுமென்றே தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் அ.தி.மு.க அரசு இழுத்தடிப்பு செய்து வருவதாக குற்றஞ்சாட்டிய அவர், இதனால் மக்கள் அடிப்படை வசதியில்லாமல் அவதியுற்று வருகின்றனர் எனத் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், உள்ளாட்சித் தேர்தலை நடத்தாவிட்டால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி தமிழக அரசுக்கு வழங்கப்பட மாட்டாது என உறுதிபடத் தெரிவித்தார்.