Tamilnadu

தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்.. சட்டசபையில் ‘அந்த’ தண்ணிக்கு குரல் கொடுத்த தனியரசு- கடுப்பில் பொதுமக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ தனியரசு, “மாலை நேரங்களில் டாஸ்மாக் கடைகளில் ஒரு பாட்டில் மதுபானம் வாங்குவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அந்த காலத்தில் புதுப்படத்திற்கு டிக்கெட் வாங்க வரிசையில் நின்று கஷ்டப்படுவதை போல் டாஸ்மாக் கடையில் வரிசையில் நிற்கவேண்டியுள்ளது. எனவே, நடமாடும் டாஸ்மாக் அமைக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

எம்.எல்.ஏ தனியரசுவின் கருத்தை கேட்டவுடன் அவையில் சிரிப்பலை எழுந்தது. சட்டசபை உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர். இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தமிழகத்தின் தலைநகரான சென்னை கடும் தண்ணீர் பஞ்சத்தில் சிக்கியுள்ளது. வரலாற்றில் முதன்முறையாக மற்ற மாவட்டங்களில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வந்து விநியோகம் செய்யும் அளவிற்கு பாதிப்பு அதிகமாக உள்ளது.

சென்னை மட்டுமின்றி மற்ற மாவட்டங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தண்ணீர் இல்லாமல் கடல் நீரை குடிநீராக்கி குடிக்கும் அவலநிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் அமைக்க வேண்டும் தனியரசு கூறியிருப்பதைக் கண்டு பொதுமக்கள் எரிச்சலடைந்துள்ளனர்.

தமிழகத்தில் நடைபெறும் சட்டவிரோத சம்பவங்கள் பெரும்பாலானவை குடியினால் ஏற்படுபவை ஆகும். இந்த குடியால் எத்தனையோ குடும்பங்கள் சீரழிந்து போயுள்ளன. தமிழகத்தில் நடக்கும் சாலை விபத்துகளில் அதிகமானவை குடித்து விட்டு மதுபோதையால் நிகழ்பவை. கள நிகழ்வு இப்படி இருக்க, சட்டசபையில் நடமாடும் மதுக்கடை கேட்டு எம்.எல்.ஏ ஒருவர் பேசி இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக்கிற்கு எதிராக தனி நபர்களும், தன்னிச்சையாக மக்களும் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் தனியரசு இவ்வாறு கேட்டிருப்பது மதுக்கடைகளுக்கு எதிராக போராடுபவர்களை கடுப்படையச் செய்துள்ளது.