Tamilnadu

துடிதுடித்த ஆசிரியர்.. குத்திக் கொன்ற மைத்துனர் : காப்பாற்றாமல் வீடியோ எடுத்த பொதுமக்கள் !

விருதுநகர் மாவட்டம் வதுவார்பட்டியை சேர்ந்த பால்பாண்டியன் மகன் வடிவேல்முருகன். இவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு கிரேஸி என்ற மனைவியும், ரோஸி ஏஞ்சல் என்ற 4 வயது மகளும் உள்ளனர். ஆனால் கணவன், மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 வருடமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

அருப்புக்கோட்டையை சேர்ந்த பிரியா என்ற பெண்ணை வடிவேல்முருகன் இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கிரேஸியின் குடும்பத்தினர் வடிவேல் முருகன் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.

இந்நிலையில், வடிவேல்முருகன் நேற்று வழக்கம் போல் தனது பள்ளியில் வேலையில் இருந்தார். அவரை தேடி கிரேஸியின் தம்பி அற்புத செல்வம் என்கிற ஆஸ்டின் அங்கு வந்தார். இருவரும் பள்ளி வளாகத்திற்கு வெளியே நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

அந்தப் பெண்ணை விடுத்து, தனது அக்காவுடன் குடும்பம் நடத்துமாறு ஆஸ்டின் வடிவேல்முருகனிடம் கெஞ்சிக் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த அற்புத செல்வம், வடிவேல் முருகனை கத்தியால் குத்தினார். ‘என்னை விட்டுவிடு.. உன்னை கெஞ்சிக் கேட்கறேன்...’ என்று கெஞ்சியும் ஆஸ்டின் அவரை விடாமல் கத்தியால் குத்தினார். இதனால், படுகாயமடைந்த வடிவேல்முருகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

பட்டப்பகலில் பள்ளி வளாகத்திற்கு வெளியே நடந்த இந்தக் கொலையை பலர் நேரில் பார்த்துள்ளனர். இதனை வீடியோவும் எடுத்து, சமூக வலைத்தளங்களிலும் பரப்பி உள்ளனர். ஆனால், அங்கிருந்த ஒருவர் கூட வடிவேல்முருகனைக் காப்பாற்ற முன்வரவில்லை.

தகவல் அறிந்து, புதூர் காவல் நிலைய ஆய்வாளர் நாகலட்சுமி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, வடிவேல் முருகன் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அற்புத செல்வம் என்ற ஆஸ்டினை போலீஸார் கைது செய்தனர். பள்ளி வளாகத்தில் ஆசிரியர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.