Tamilnadu

மதுராந்தகம் ஏரியில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிய வழக்கு: 2 வாரத்தில் பதிலளிக்க அரசுக்கு ஆணை!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மூன்றாவது மிகப்பெரிய நீர் நிலைகளில் ஒன்று மதுராந்தகம் ஏரி. சுமார் 2 ஆயிரத்து 846 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியின் மூலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து கிராம, பேரூராட்சி, ஊராட்சிகளுக்கும் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.

தமிழகமெங்கும் குடிநீர் பிரச்னை தலைத்தூக்கியுள்ள நிலையில், மதுராந்தகம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் தமிழக அரசு மெத்தனம் காட்டி வருகிறது என மக்கள் மத்தியில் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மதுராந்தகம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரக் கோரியும், ஏரியைச் சுற்றி 5 மீட்டர் உயரத்திற்கு சுற்றுச்சுவர் எழுப்பக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் நிர்மல் குமார் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு, மனு தொடர்பாக தமிழக அரசும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரும் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.