Tamilnadu
அணுக்கழிவு மையம் கூடாது - கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற மறுத்த அரசு அதிகாரிகள்!
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரு அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அணு உலைகளில் இருந்து வெளிவரும் மிக ஆபத்தான கதிர்வீச்சு கொண்ட அணுக்கழிவுகளை கூடங்குளம் அணு உலை வளாகத்திலேயே வைக்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு.
இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பொதுமக்களிடம் ஜூலை 10-ம் தேதி கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த இருப்பதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்த நிலையில், திடீரென மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் கிராமசபை கூட்டங்கள் இன்று நடைப்பெற்றன. கூடங்குளம் அருகே உள்ள விஜயாபதி பஞ்சாயத்திலும் இன்று கிராமசபை கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், அணுக்கழிவு மையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்தனர். இது தொடர்பாக கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாவட்ட நிர்வாகம் மூலமாக அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்கள்.
ஆனால் அணுக்கழிவு மையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதனால் அதிருப்தியடைந்த, பொதுமக்கள் கோஷங்களை எழுப்பியபடி அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கிராம சபைக் கூட்டங்களும், கருத்துக் கேட்பு கூட்டங்களும் மக்களின் கருத்தைக் கேட்டு அதன் படி ஒரு திட்டத்தை செயல்படுத்துவதோ, மாற்றி அமைப்பதோ அல்லது கைவிடுவதோ என முடிவெடுக்கவே. ஆனால், மக்களின் குரலை கேட்பதில்லை என்ற முடிவோடு இது போன்ற கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. மக்களின் எதிர்ப்பையும் இவர்கள் பதிவு செய்வதில்லை. மக்களுக்காக அரசு என்படை மறந்து அரசு சொல்வதற்கு மக்கள் கட்டுப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அரசாங்கம் இயங்கி வருகிறது. அதையும் மீறி மக்கள் ஒன்று திரண்டு போராடினால், துப்பாகிகளுக்கு அவர்களை பலி கொடுக்கிறது.
மக்கள், சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சிகள் என பல தரப்பினரும் அணு கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில், கருத்துக் கேட்பு கூட்டம் நடக்கும்போது, உண்மை நிலை தெரியவரும்.
Also Read
-
“அச்சுறுத்தல்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு பயப்பட மாட்டார்” : கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படைத்துள்ள “ததும்பும் தமிழ்ப் பெருமிதம்” நூல்!
-
எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு திராவிட மாடல் 2.O அமையும்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
“என்னை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சந்திக்கலாம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை வசதி அமைக்கப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!