Tamilnadu

வக்பு வாரியக் கல்லூரி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு? : சிபிஐ தீவிர விசாரணை!

மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள வக்பு வாரியக் கல்லூரியில் 2017-ம் ஆண்டு 7 பெண் பேராசிரியர் உட்பட 28 பேர் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து, சர்தார் பாட்ஷா, மகபூப் பாட்ஷா, அலி அக்பர் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தனர். அதில், "பேராசியர்களை நியமனம் செய்வதில் 28 பேராசிரியர்களிடம் கல்லூரியின் செயலாளராக பணியாற்றிவந்த ஜமால் மைதீன், வாரியத் தலைவர் இருந்த அ.தி.மு.க முன்னாள் எம்.பி அன்வர் ராஜா, அமைச்சர் நிலோஃபர் கபில் உட்பட நிர்வாக ஊழியர்கள் சிலர் லஞ்சம் பெற்றுள்ளார்கள்” என தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், உதவிப் பேராசிரியர்கள் நியமன முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கை சிபிஐ ஆறு மாதத்திற்குள் விசாரணை முடித்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் எனவும், இதற்கு தமிழக அரசு தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிக் கொடுக்கவேண்டும் எனவும் நீதிபதிகள் கூறியிருந்தனர்.

அதையடுத்து, வக்பு வாரியக் கல்லூரியில் இன்று (வியாழக்கிழமை) சிபிஐ ஆய்வாளர் வேலாயுதம் தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிபிஐ அதிகாரிகள் கல்லூரி அலுவலகத்தில் பெண் பேராசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக அந்த விசாரணை நடைபெற்றது. முன்னதாக ஆண் பேராசிரியர்களை நேரடியாக வரவழைத்து விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.