Tamilnadu

“மின் தட்டுப்பாடு இல்லை என அமைச்சர் சொல்வது பொய்” : மின் ஊழியர் சங்க தலைவர் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் மின் தட்டுபாடு இல்லை என மின்துறை அமைச்சர் சொல்வது திட்டமிட்ட பொய் எனவும் மின்சாரத் துறைக்கு அவர் அமைச்சர் அல்ல; புரோக்கர் என்று மின் ஊழியர் அமைப்பின் மாநில தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நெல்லையில் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது அவர் கூறியதாவது, " தமிழகத்தில் மின்கட்டணத்தை 30% உயர்த்தி 20 ஆயிரம் கோடி ரூபாய் பொருளாதாரச் சுமையை மக்கள் மீது அரசு திணிக்க இருக்கிறது. தற்போது தமிழகத்தில் 325 உதவிப் பொறியாளர்கள் மின்வாரியத்தில் தேர்வு செய்யப்பட்டதில் 36 வட மாநிலத்தவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மற்ற மாநிலங்களில் உள்ளதைப் போல மாநில பொதுத்துறைகளில் காலியாகும் பணியிடங்களில் அந்த மாநிலத்தவரை நியமனம் செய்ய வேண்டும் என்ற சட்டத்தை போல தமிழகத்திலும் கொண்டுவர வேண்டும்.

வட மாநிலத்தவர்கள் நியமனம் தொடர்பாக அரசு சட்டத்திருத்தம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் 1,000-க்கும் மேற்பட்ட உதவி செயற்பொறியாளர் பணியிடங்கள் காலியிடங்கள் உள்ளன. மாநில பொதுத்துறை நிறுவன பணிகளுக்கு பிற மாநிலத்தவர்கள் விண்ணப்பம் செய்யாதளவு அரசு சட்ட திருத்தம் கொண்டுவரவேண்டும்.

தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை என மின்துறை அமைச்சர் சொல்வது திட்டமிட்ட பொய். மின்சார உற்பத்தியில்லாமல் 3,189 மெகாவாட் மின்சாரம் சந்தையில் கூடுதல் விலை கொடுத்து வாங்கப்படுகிறது. தமிழகத்திற்குத் தேவையான மின்சாரத்தில் மூன்றில் ஒரு பங்கு சந்தையில் விலைகொடுத்து வாங்கப்படுகிறது. மின்சார துறைக்கு தங்கமணி அமைச்சர் அல்ல; புரோக்கர்” எனத் தெரிவித்துள்ளார்.