Tamilnadu

திராவிட மண்ணில் இந்தி திணிப்பு என்பது எடுபடாது - ஆசிரியர் கி.வீரமணி

மத்திய பாஜக அரசின் புதிய கல்விக்கொள்கையில் நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த முயற்சித்து வருகிறது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பேசியிருப்பதாவது,

பாஜக அரசு புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் ஓய்வு பெற்ற ஆணையரை நியமித்து ஆர்.எஸ்.எஸ்ஸின் சமஸ்கிருதத்தை திணிக்க ஆரம்பித்துள்ளது.

கலைஞர் கருணாநிதியின் சீரிய முயற்சியால் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. அதனை ஒழிக்கும் வகையில் இந்தியை புகுத்த திட்டமிட்டுள்ளது ஆர்.எஸ்.எஸ். கும்பல்.

வட இந்தியாவின் ஆதரவை வைத்து தென் இந்தியாவை வஞ்சிப்பது ஏற்கத்தக்கதல்ல. பேரறிஞர் அண்ணாவின் பெயரில் ஆட்சியை நடத்துபவர்கள் இந்த மொழி திணிப்பை ஏற்பார்களா என்று தெரியவில்லை ஆனால், கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்திவரும் நிலையில் இந்தி திணிப்பை ஒரு போதும் தமிழகம் ஏற்காது.

இது திராவிட மண், பெரியாரின் பூமி இங்கு எந்த மொழித் திணிப்பும் எடுபடாது. விருப்பப்பட்டு மொழியை ஏற்றுக்கொள்பவர்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனால் மொழி திணிப்பை ஏற்படுத்தினால் மாபெரும் போராட்டத்தை நடத்த தயங்க மாட்டோம் என தெரிவித்தார்.

மேலும், ஆளும் அரசாங்கம் முதுகெலும்புடன் இருக்க வேண்டாம். இரட்டை வேடம் போடாமல், தோல்வி பயத்தில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு இந்த மொழி திணிப்பை அதிமுக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.