Tamilnadu

அரியரால் டிகிரி வாங்காதவர்களுக்கு ‘அரிய’ வாய்ப்பு : அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு!

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் உள்ள உறுப்புக் கல்லூரிகளில் 4 ஆண்டுகளுக்கு முன்பு பொறியியல் படிப்பை முடித்தவர்கள் அரியர் தேர்வை எழுத முடியாமல் போனதால் இதற்கான விதிமுறைகளை மாற்ற வேண்டும் என அண்ணா பல்கலையில் படித்த மற்றும் படித்துவரும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை ஏற்ற அண்ணா பல்கலைக்கழகம் அரியர் தேர்வுக்கான விதிகளை தளர்த்தி அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்ட அறிவிப்பாணையில் குறிப்பிட்டதாவது,

அண்ணா பல்கலைக்கழகத்தில் 2000-ம் ஆண்டு முதல் பொறியியல் படிப்பை முடித்த மாணவர்கள் வருகிற நவம்பர் மற்றும் 2020 ஏப்ரலில் நடைபெறும் செமஸ்டர் தேர்வின்போது அரியர் தேர்வை எழுதிக்கொள்ளலாம்.

அதேபோல், பல்கலையின் உறுப்புக் கல்லூரிகளில் 2001-ம் ஆண்டு முதல் படிப்பை முடித்தவர்கள் 2019 நவம்பர் மற்றும் 2020 ஏப்ரலில் எழுதிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, 2001 முதல் பொறியியல் படிப்பை முடித்தவர்கள், 3வது செமஸ்டர் முதல் 8-வது செமஸ்டர் வரையிலான அரியர் தேர்வுகளை மட்டுமே எழுதிக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல், அண்ணா பல்கலையில், 2002-ம் ஆண்டு முதல் பகுதி நேர மற்றும் தொலைதூரக் கல்வி முறையில் படித்தவர்களும் அரியர் தேர்வு எழுதலாம்.

மேலும், இந்தப் புதிய நடைமுறை இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளில் அரியர் வைத்துள்ள அனைத்து மாணவர்களுக்கும் பொருந்தும்.

அரியர் தேர்வு மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற கூடுதல் விவரங்கள் ஜூன் 2வது வாரத்தில் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும், உறுப்புக் கல்லூரி மற்றும் சுயநிதி கல்லூரிகளுக்கான உரிய அறிவிப்பை பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாடு அலுவலகம் பின்னர் அனுப்பும் என்றும் அண்ணா பல்கலை. அறிக்கை வெளியிட்டுள்ல்ளது.