Tamilnadu

பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு கோரி மனு: தேர்தல் அதிகாரியை அணுக உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்த ஏப்ரல் 18-ஆம் தேதியன்று நடைபெற்றது. வாக்குப்பதிவின் போது அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்தில் உள்ள பொன்பரப்பி கிராமத்தில் தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் பகுதியில் ஒரு கும்பல் நுழைந்து தாக்குதல் நடத்தியது. இதில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. தேர்தல் நாளில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் பொன்பரப்பி பகுதியை சேர்ந்த விஷ்ணுராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் தனது வாக்குச்சாவடி நடைபெற்ற வன்முறை காரணமாக தன்னால் வாக்களிக்க முடியவில்லை, எனவே மீண்டும் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இது தொடர்பான ஆவணங்களுடன் தலைமை தேர்தல் அதிகாரியை அணுகும்படியும், அவர் மறு தேர்தல் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஏற்கனவே மறுவாக்குப்பதிவு நடத்துவது குறித்து தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்ட பட்டியலில் பொன்பரப்பி சேர்க்கப்படாத சூழலில் தான் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர். ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் ஆவணங்களுடன் செல்ல அறிவுறுத்தி இருப்பது மேலும் கால தாமதத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.