Tamilnadu

துப்பாக்கிச்சூடு நினைவேந்தல் கூட்டம்: நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கிய உயர்நீதிமன்றம்!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த ஆண்டு மே 22-ல் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் கல்லூரி மாணவி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். 200 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வுக்கு கண்டனங்கள் குவிந்தது. துப்பாக்கிச்சூடு வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் ஓராண்டு நிறைவு பெறுகிறது. அந்த நினைவு தினத்தை ஒட்டி, வரும் 22-ம்தேதி நினைவேந்தல் கூட்டம் நடத்த அனுமதி கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த பேராசிரியை பாத்திமா பாபு, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, தூத்துக்குடி பெல் ஓட்டலில் காலை 9 மணி முதல் 11 ஆம் தேதி வரை கூட்டம் நடத்த அனுமதி வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த கூட்டத்தில் 250 நபர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கூட்டத்தில் எந்த வித அசம்பாவிதங்கள் நடைபெறாது என தெரிவித்துள்ளனர். கூட்டத்திற்கு வருவோரை போலீசார் வீடியோ பதிவு செய்யலாம் என்று நீதிமன்றம் கூறியது. மேலும் மே 23ம் தேதி தூத்துக்குடி ஒட்டப்பிடாரத்தில் தேர்தல் நடைபெறுவதால் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பார்கள் தேதி மாற்றி நிகழ்ச்சியை நடத்த அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.