Tamilnadu

பெரியார் தமிழ் சமூகத்தின் ஸ்கேன் கருவி : கி.வீரமணி பேச்சு 

தந்தை பெரியார் குறித்த வைரமுத்துவின் “தமிழாற்றுப்படை” நிகழ்ச்சி திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து, தி.க தலைவர் வீரமணி,பேராசிரியர் அருணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தி.க தலைவர் கி. வீரமணி தலைமை உரையாற்றினார்.அப்போது அவர் பேசியதாவது,

“பெரியாரின் பிம்பம் தமிழ்நாட்டில் எங்குமே இருக்கக் கூடாது என சிலர் முயற்சி செய்து கொண்டு இருக்கும் நேரத்தில் பெரியாரை ஒருவரும் அழிக்க முடியாது என பறைசாற்றியுள்ள வைரமுத்துவுக்கு பெரியார் தொண்டர்கள் சார்பில் நன்றிகளும், வாழ்த்துக்களும் கூறவே நாங்கள் வந்துள்ளோம்.

தமிழர்கள் உயர்ந்தால் அவர்களை பெருமைப்படுத்துங்கள் என பெரியார் கூறியுள்ளார். தந்தைப் பெரியார் தமிழ்ச் சமூகத்தின், புகைப்படக்காரரோ,ஓவியரோ அல்ல ; அவர் ஸ்கேன் செய்ய கூடியவர். சமூகத்தில் உடைந்த பாகத்தை ஸ்கேன் செய்து காட்டி அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என எடுத்துக்காட்டியவர்.

பெரியார் ஒரு இலக்கியவாதியா என சிலர் கேட்கிறார்கள் அவர்களுக்கெல்லாம் வைரமுத்துவின் தமிழாற்றுப்படை பதில் கூறும். இந்தியாவிலே களப்போராட்டத்தில் கலந்து கொண்ட முதல் பெண் பெரியாரின் மனைவி நாகம்மையார் தான். அன்றைய காலகட்டத்தில், சொன்னதையே செய்யாத சமுதாயத்தில் பெரியார் மட்டுமே செய்வதை தான் சொன்னார்.

வைரமுத்துவின் தமிழாற்றுப்படையில் மட்டுமல்ல ; தமிழ்ச் சமூகத்தின் எழுத்துக்களில் பகுத்தறிவு எங்கெல்லாம் தலைகாட்டுகிறதோ, அங்கெல்லாம் பெரியார் இருக்கிறார், தொடர்ந்து இருப்பார்” என்று தனது உரையில் குறிப்பிட்டார்.