Tamilnadu

ஏமாற்றிய ஃபானி புயல் - எகிறப்போகும் கோடை வெப்பம்; தலைதூக்கும் தண்ணீர் பஞ்சம் 

மூன்றாம் உலகப்போர்  என ஒன்று நடந்தால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். சுற்றுச்சூழல் மாறுபாட்டால், இன்று இயற்கை மனிதர்களுக்கான வளங்களை தர மறுக்கிறது. பொய்த்து போன மழையின் காரணமாக தற்போது தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் அதிபயங்கரமாக தலைத்தூக்கியுள்ளது


கஜா புயலானது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் , அதனை விட பலமடங்கு வீரியம் கொண்ட  ஃபானி  புயலை எதிர்பார்த்துக் காத்திருந்தது தமிழகம்.  ஃபானி தமிழகத்தில் கரைய கடந்திருந்தால் வட தமிழகம் பெரும் பாதிப்பை சந்தித்திருக்கக் கூடும். அதையும் மீறிய இந்த  எதிர்பார்ப்பிற்கு காரணம் “ தண்ணீர்”. ஃபானி புயல் தமிழகத்தை ஒட்டி கரையை கடக்காது என்பது ஆறுதலாக இருந்தாலும் அது தமிழகத்திற்கு அதீத வெப்பத்தையும் , தண்ணீர் பஞ்சத்தையும் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறது.

தற்போது ஃபானி புயலின்  அடுத்த அடுத்த நகர்வை பொறுத்து அது தமிழகத்திலிருந்து 300 கிமீ தொலைவில் மட்டுமே கரைய கடக்க வாய்ய்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக புயலானது தரைக்காற்றினை இழுத்துச்செல்லாமல் , கடலில் உள்ள ஈரக்காற்றினை எடுத்து செல்லும். எனவே தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்  என்று தெரிவிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். கடந்த 2003 ஆம் ஆண்டிற்கு பிறகு தமிழகம் சந்திக்கக்கூடிய மிகப்பெரிய வெயில் தாக்கம் இதுவாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

சென்னையின் பிரதான ஏரிகளான பூண்டி , சோழவரம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட  இடங்களில்  தண்ணீர் வரத்து இல்லாததால் மிகப்பெரிய தண்ணீர் பஞ்சத்தை எதிர்நோக்கியிருக்கிறது மாநகர்.  நிலத்தடி நீர் மட்டமும் குறைந்துவிட்டதால் 900 அடிக்கு அதிகமான ஆழங்களில் மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது. பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டதின் கடைமடைப் பகுதிகள் தண்ணீர் தட்டுப்பாட்டில் தத்தளித்து வருகின்றன.

காவிரி நீர் திறந்துவிட்ட பொழுது  கடைமடை பகுதிகளான  பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராமபட்டிணம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் வந்தவடையவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்தனர். ஆனால் அதனை கண்டுகொள்ளாத ஆட்சியாளர்கள், அலட்சியமாக தண்ணீர் எல்லா பகுதிகளுக்கும் சென்றடைந்துவிட்டன, இனி விவசாயாம் செழிக்கும் என  பேட்டி கொடுத்தனர் ஆனால் இன்று மக்கள் குடிநீருக்கே  அவதிப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதே போல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு  பிரதான குடிநீர் ஆதாரமாக இருக்கக்கூடிய கொள்ளிடம் ஆற்றங்கரையோர பகுதி மக்கள், குடம் 5 ரூபாய் என டேங்கர் லாரி  தண்ணீடருக்கு ஏங்கி நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இன்னும் ஓரிரு மாதங்களில் வெப்பநிலையின் தாக்கதோடும் ,  தாகத்தோடும்  மக்கள் அவதிக்குள்ளாவதற்குள் , குடிநீர் தட்டுப்பாட்டை போக்க  மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.