Tamilnadu

குழந்தை விற்பனை விவகாரம் : ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கைது!

ராசிபுரத்தில் நடைபெற்ற குழந்தை விற்பனை தொடர்பாக கொல்லிமலையைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், செவிலியர் பர்வீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கடந்த 30 ஆண்டுகளாக குழந்தைகளை விற்பனை செய்து வருவதாக ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா பேசிய ஆடியோ வெளியானது. இதுகுறித்து அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்று காலை, நாமக்கல், ராசிபுரம் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளின் தகவல்களை ஆய்வு செய்ய 10 குழுக்களை அமைத்து உத்தரவிட்டது நாமக்கல் மாவட்ட பொது சுகாதாரத்துறை.

இந்நிலையில், அமுதா அளித்த தகவலின் அடிப்படையில் கொல்லிமலையைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், தனியார் மருத்துவமனை செவிலியர் பர்வீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் அமுதாவுக்கு உதவியது தெரியவந்துள்ளது.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசனிடம் நடத்திய விசாரணையில் கொல்லிமலை பகுதியில் இருந்து 4 குழந்தைகளை பெற்று அமுதாவிடம் விற்பனை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அமுதாவுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பணம் வரவு வைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் தகவல் கிடைத்ததையடுத்து அமுதாவின் வங்கிக் கணக்கு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.