Sports

"BCCI-யை போல நம்மால் முடியாது... கனவு வேண்டுமானால் காணலாம்" - பாக். வாரியத்தை விமர்சித்த வாசிம் அக்ரம் !

இமயமலையின் அடிவாரத்தில் உள்ள தரம்சாலாவில் இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கத்துக்கு சொந்தமான சர்வதேச மைதானம் அமைந்துள்ளது. இயற்கையாக அமைந்த பனிமலை சூழ்ந்த அந்த மைதானம் உலகின் அழகான மைதானங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியின் போது இங்கு நடைபெற்ற போட்டி பனிமூட்டம் காரணமாக நிறுத்தப்பட்டது அப்போது அதிகமாக பேசப்பட்டது. உலகின் அழகான மைதானம் தரம்சாலா மைதானம்தான் என்று பல்வேறு சர்வதேச வீரர்களும் கருத்து தெரிவித்தனர்.

கடைசியாக இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிய ஐந்தாவது டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் நடைபெற்றது. அப்போது மைதானத்தின் இயற்கை காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அதனைத் குறிப்பிட்டு பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் இது போன்ற இயற்கை அழகு கொண்ட மைதானத்தை ஏன் பாகிஸ்தான் அமைக்கவில்லை என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரமை குறிப்பிட்டு கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்க்கு பதிலளித்த வாசிம் அக்ரம், "நம்மால் நமது நாட்டில் உள்ள 3 சர்வதேச மைதானங்களையே சரியாக பராமரிக்க முடியவில்லை. பின்னர் எப்படி புதிய ஒன்றை கட்ட முடியும்? ட்ரோன் கேமராவில் காண்பிக்கப்பட்ட ஃகடாபி மைதானத்தின் கூரையை நீங்கள் பார்த்தீர்களா? அந்த அளவு அது மோசமாக இருந்தது.

நாம் தரம்சாலா, குயின்ஸ்டவுன் போன்ற மைதானங்களை பார்த்துள்ளோம். அதைப் பார்த்த பின்பும் பாகிஸ்தான் வாரியம் ஏன் வடக்கு பகுதியில் அது போன்ற மைதானத்தை உருவாக்க முதலீடு செய்யவில்லை என்று கேட்க தோன்றுகிறது. நம்மால் புதிய மைதானத்தை பற்றி கனவு மட்டுமே காண முடியும்" என்று கூறியுள்ளார்.

Also Read: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலியை நீக்க திட்டம் - வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி!