Sports
"இந்தாண்டு IPL தொடரில் ரிஷப் பண்ட் கட்டாயம் விளையாடுவார்" - பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் உறுதி !
உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த இளம் வீரர் ரிஷப் பண்ட் இந்திய அணியில் விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி கார் விபத்தில் சிக்கினார். தனது வீட்டிற்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது, நிலைதடுமாறி சாலையிலிருந்த டிவைடரில் கார் மோதியது. இதனால் காரும் உடனே தீப்பற்றி எரிந்தது. இதனை கண்ட பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த ரிஷப், டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டார். அங்கு முழங்காலில் பாதிக்கப்பட்டுள்ள தசைநார் கிழிப்பிற்கும் 'ஆப்பரேஷன்' செய்யப்பட்டது. இதன் காரணமாக இந்த காயத்தில் இருந்து மீண்டு இவர் பயிற்சியில் ஈடுபட சுமார் ஒரு ஆண்டு தேவைப்படும் என கூறப்பட்டது.
இதனிடையே தற்போது காயத்தில் இருந்து ஓரளவு மீண்டு குறைந்த அளவு பயிற்சிகளில் ரிஷப் பண்ட் பங்கேற்று வருகிறார். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெங்களூருவில் ரிஷப் பண்ட் இந்திய அணியினருடன் சேர்ந்து இருந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியானது.
இந்த நிலையில், இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் விளையாடுவார் என அவர் இடம்பெற்றுள்ள டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "ரிஷப் ஆற்றல் மிகுந்த வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. அவர் வரவுள்ள ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் உறுதியாக உள்ளார். அவரால் தொடர் முழுவதும் விளையாட முடியுமா, தொடர் முழுவதும் கீப்பிங் செய்ய முடியுமா என்பதுதான் தெரியவில்லை என்றாலும் அவர் கட்டாயம் விளையாடுவார்.
அவரிடம் கேட்டால் தொடர் முழுவதும் விளையாடுகிறேன். 4வது வரிசை வீரராக பேட்டிங் செய்வேன் என்றுதான் கூறுகிறார். கடந்த ஆண்டு நாங்கள் அவரை மிஸ் செய்தோம். இந்த சீசனில் அனைத்து ஆட்டங்களிலும் இல்லாவிட்டாலும் குறைந்தது 10 ஆட்டங்களிலாவது விளையாடுவார் என்று நம்புகிறேன். அவரால் முழுவதுமாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டால் டேவிட் வார்னர் கேப்டன் பொறுப்பை ஏற்பார்"என்று கூறியுள்ளார்.
Also Read
-
“திராவிட மாடல் ஆட்சி ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு பொற்காலம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
யாருக்காக செயல்படுகிறார் மோடி? : வரியை மீறி ரசியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கும் இந்தியா!
-
“பிற்போக்குத்தனமான ஒரு இயக்கம் உள்ளது என்றால் அது RSS தான்” - செல்வப்பெருந்தகை விமர்சனம்!
-
“இந்த 4 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் நம் முதல்வர்” - துணை முதல்வர் புகழாரம்!
-
9 நாட்கள் சூரிய சக்தி தொழில் முனைவோர் குறித்த பயிற்சி.. எங்கு? எப்போது? விண்ணப்பிப்பது எப்படி? - விவரம்!