Sports

ICC உலகக்கோப்பை : பாகிஸ்தானுக்கு மட்டும் விசா வழங்க தாமதம்.. இந்திய அரசின் செயலால் பரபரப்பு !

கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பின்னர் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அதன்பின்னர் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. அதேபோல அரசியல் காரணங்களுக்காக இரு நாடுகள் இடையே எந்த தொடரும் நடைபெறவில்லை. ஐசிசி நடத்தும் தொடரில் மட்டுமே இரு அணிகளும் விளையாடி வருகிறது.

இந்த சூழலில் இந்த ஆண்டுக்கான ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது.

ஆசிய கோப்பை சர்ச்சை காரணமாக இந்த தொடரில் பங்கேற்க முதலில் மறுத்த பாகிஸ்தான் பின்னர் விளையாட சம்மதம் தெரிவித்தது. இதன் காரணமாக அந்த அணி விரைவில் இந்தியா வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதில் சிக்கல் எழுந்துள்ளது.

இந்த உலககோப்பைக்கு முன்னர் துபாய் சென்று அங்கு பயிற்சியில் ஈடுபட்டு பின்னர் இந்தியா செல்ல பாகிஸ்தான் வாரியம் திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது உலகக்கோப்பை தொடருக்காக இந்தியா வர பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகக்கோப்பைக்காக இந்தியா வரவிருக்கும் மற்ற அணிகளுக்கு இந்தியா சார்பில் விசா வழங்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் அணிக்கு மட்டும் இந்தியா விசா வழங்க தாமதம் செய்வது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக விசா கிடைத்ததும் துபாய் பயணத்தை ரத்து செய்துவிட்டு இந்தியா வர பாகிஸ்தான் வாரியம் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Also Read: "இந்திய அணிக்காக தோனி எந்த தியாகத்தையும் செய்யவில்லை" - கம்பீரின் கருத்துக்கு ஸ்ரீசாந்த் பதிலடி !