Sports

இரண்டாம் இடத்தில் சுப்மான் கில்.. மீண்டும் டாப் 10-ல் நுழைந்த கோலி.. அதிரடி ஏற்றம் கண்ட குல்தீப் யாதவ் !

சமீப காலமாக இந்தியாவின் தவிர்க்கமுடியாத வீரராக இளம்வீரர் சுப்மான் கில் உருவாகியுள்ளார். கவாஸ்கர்,சச்சின், கோலி என ஒவ்வொரு தலைமுறைக்கும் சிறப்பாக ஒரு மட்டைவீச்சாளரை இந்தியா தொடர்ந்து உருவாகிவரும் நிலையில், கோலிக்கு பின்னர் அந்த இடத்துக்கு வருவது யார் என்ற கேள்வி எழுந்தது.

தற்போதைய நிலையில், கோலிக்கு பின் இந்திய மட்டைவீச்சை வழிநடத்துபவராக சுப்மான் கில் இருப்பார் என பல்வேறு முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற யு-19 போட்டியில் சிறப்பான செயல்பட்ட கில் அனைவரையும் கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடிவந்த கில் கடந்த 2019-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான தொடர் மூலம் இந்திய அணிக்காக அறிமுகம் ஆனார்.

அதன் பின்னர் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணியில் தனது இடத்தை தக்கவைத்த கில், மூன்று விதமான கிரிக்கெட் தொடரிலும் இந்தியாவின் தவிர்க்கமுடியாத வீரராக மாறியுள்ளார். அதிலும் கடந்த ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு அணிக்கு எதிரான போட்டியில் 200 ரன்கள் குவித்து சாதனை படைத்ததோடு, அதே மாதம் டி20 போட்டியிலும் சதம் விளாசி இளம்வயதில் மூன்று விதமான போட்டிகளிலும் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

அதுமட்டுமின்றி தற்போது நடைபெற்றுவரும் ஆசிய கோப்பையிலும் தனது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில், ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப்பட்டியலில் 759 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருந்து கில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

அதேபோல விராத் கோலி 8-வது இடத்துக்கும், ரோகித் சர்மா 9-வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர். மேலும், பந்துவீச்சளர்களுக்கான தரவரிசையில், இந்தியிற் வீரர் குல்தீப் யாதவ் 12-வது இடத்தில் இருந்து 7-வது இடத்துக்கு முன்னேறினார். அதோடு இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் 9-வது இடத்தில் உள்ளார்.

Also Read: பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் தடுமாறக் காரணம் இதுதான் - இந்திய வீரர் சுப்மான் கில் கூறியது என்ன ?