Sports

"இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பையில் நிச்சயம் பங்குபெற மாட்டேன்" - உறுதிப்படுத்திய பென் ஸ்டோக்ஸ் !

31 வயதான இங்கிலாந்து வீரர் பெண் ஸ்டோக்ஸ், 83 டெஸ்டுகள், 104 ஒருநாள், 34 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஜோ ரூட்டின் விலகளுக்கு பின்னர் டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் 0, 21, 27 என ரன்கள் எடுத்தார். ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. இதனால் அவர் மீது இங்கிலாந்து பத்திரிகைகள் கடும் விமர்சனம் வைத்தன.

அதனைத் தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகத் திடீரென அறிவித்தார். அதன்படி கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்துக்குப் பிறகு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

இது குறித்து கூறிய அவர் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்பது கடினமாக இருப்பதால் இம்முடிவை எடுத்ததாக அவர் விளக்கமளித்தார்.அதன்பின்னர் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு அவர், அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், விரைவில் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வருவதால் , ஓய்வில் இருந்து மீண்டு வந்து ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்பீர்களா? என்று பென் ஸ்டோக்ஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது

அதற்கு பதிலளித்த அவர், " நான் முன்பே கூறியதுதான். ஒருநாள் போட்டிகளில் ஓய்வை அறிவித்துவிட்டேன். அதனை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பே இல்லை. அதனால் இனி ஒருநாள் போட்டிகளில் எப்போதும் விளையாடமாட்டேன்" என்று கூறியுள்ளார். எதிர்வரும் உலகக்கோப்பையை இங்கிலாந்து அணி பட்லர் தலைமையில் பங்கேற்கும் என தகவல்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.