Sports

பெண் கிரிக்கெட் வீராங்கனை தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு.. பயிற்சியாளர் மீது புகார்.. நடந்தது என்ன?

ஒடிசாவைச் சேர்ந்தர் ராஜஸ்ரீ ஸ்வைன். மாநில அணியில் ஆடிவரும் பெண் கிரிக்கெட் வீராங்கனையான இவர் கடந்த 11ம் தேதி காணாமல் போனதாக அவரது பயிற்சியாளர் புஷ்பாஞ்சலி பானர்ஜி என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பல்வேறு இடங்களில் ராஜஸ்ரீ ஸ்வைனை தேடி வந்த நிலையில், கட்டாக் நகருக்கு அருகே அதாகர் பகுதியில் உள்ள குருதிஜாதியா வனப்பகுதியில் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், வீராங்கனையின் உடலில் காயங்கள் மற்றும் கண்கள் சேதமடைந்து இருந்ததாகவும், இதனால் அவர் படுகொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், ராஜஸ்ரீ ஸ்வைனின் இருசக்கர வாகனம் காட்டின் நடுவே இருந்ததும், அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததாகவும் வெளிவந்த தகவல் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக போலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிக்காக பஜ்ரகபட்டி பகுதியில் ஒடிசா கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பயிற்சி முகாமில் ராஜஸ்ரீ கலந்துகொண்டதாகவும், அவர்கள் ஒரு ஹோட்டலில் இதற்காக தங்கியிருந்தும் வந்துள்ளனர். அப்போது தனது தந்தையை சந்திக்க பூரிக்கு செல்வதாக தனது பயிற்சியாளரிடம் தெரிவித்துவிட்டு சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: "கிரிக்கெட்தான் எங்கள் நாட்டின் ஒரே நம்பிக்கை.. இதில் அரசியல் வேண்டாம்" - ரஷீத் கான் உருக்கம்!