Sports

மீண்டும் இந்திய அணியில் இடம் ? - ஐபிஎல் தொடர் குறித்து தமிழக வீரர் நடராஜன் கூறியது என்ன ?

தமிழக வீரர் நடராஜன் TNPL தொடரில் தான் வீசிய சிறப்பான யார்க்கர்களால் ஐபில் தொடரில் கால் பதித்தார். சன்ரைசர்ஸ் அணியில் அவர் வீசிய ஒவ்வொரு யார்க்கருமே பேசுபொருளாகியிருந்தது. அந்த ஐ.பி.எல் சீசன் முடிந்த உடனேயே ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்த ஒரே சுற்றுப்பயணத்தில் மூன்று ஃபார்மட்களிலுமே இந்திய அணிக்கு அறிமுகமாகி சிறப்பாகவும் செயல்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் துருப்புச்சீட்டாக இருப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென காயமடைந்தார்.

பின்னர் கடந்த ஐபில் தொடரிலும் சிறப்பாகவே செயல்பட்டார். எனினும் அடுத்தடுத்து அவர் காயம் அடைந்தது அவருக்கு பெரும் பின்னடைவாக அமைந்ததால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையில் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

எனினும் அவர் மீண்டும் எப்போது இந்திய அணியின் நீல ஜெர்சியை அணிவார் என தமிழக ரசிகர்களும் அவர் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என நடராஜன் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதம் நடைபெறும் நிலையில், ஹைதராபாத் அணியால் நடராஜன் மீண்டும் தக்கவைக்கப்பட்டுள்ளார். அந்த தொடரில் அவர் தன்னை நிரூபித்து மீண்டும் அணியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கலாம்.