Sports

இறுதிப்போட்டியில் தோற்ற பாகிஸ்தான்.. கோலாகலமாக கொண்டாடிய ஆப்கான் ரசிகர்கள்.. காரணம் என்ன ?

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான், இலங்கை அணிகள் தகுதி பெற்றன. இறுதிப் போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

இதற்க்கு முன்னதாக சூப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 129 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழக்க, இறுதிக்கட்டத்தில் பரபரப்பான நிலையை எட்டியது.

கடைசி 2 ஓவருக்கு 21 ரன்கள் தேவைபட்ட நிலையில், ஃபரீத் அகமது வீசிய 2ஆவது பந்தில் ஹரிஸ் ரவூப் ஆட்டமிழந்தார். 4ஆவது பந்தில் ஆசிப் அலி ஒரு சிக்ஸர் அடித்து அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது ஆப்கானிஸ்தான் வீரர்கள் அனைவரும் விக்கெட்டை கொண்டாடிய போது, பவுலர் ஃபரீத் அகமது ஆசிப் அலி பக்கத்தில் வந்து கையை உயர்த்தி கத்தினார்.. இதனால் ஆத்திரமடைந்த ஆசிப் அலி அவரை கையால் சற்று தள்ளி விட்டு பேட்டால் ஓங்கினார். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

பின்னர் இறுதி ஓவரில் கைவசம் ஒரு விக்கெட் இருக்க, வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. பரபரப்பான நேரத்தில் பாரூக்கி வீசிய கடைசி ஓவரில் முதல் 2 பந்தையும் புல்டாஸாக வீச இளம்வீரர் நசீம் ஷா தொடர்ச்சியாக 2 சிக்ஸர் அடித்து பாகிஸ்தானை வெற்றிபெற வைத்தார்.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்ற நிலையில், பார்வையாளர்களாக அமர்ந்திருந்த ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி பயங்கரமாக மோதிக்கொண்டனர். அரங்கில் இருந்த சேர்களும் ஒருவர் மேல் ஒருவர் வீசப்பட்டது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் மத்தியில் ஒரு விரோத போக்கை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இறுதிப்போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இதனை தொலைக்காட்சி மூலம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஆப்கான் ரசிகர்கள் பாகிஸ்தான் தோல்வியை கோலாகலமாக கொண்டாடினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

Also Read: PAK vs SL இறுதி போட்டியில் இந்திய ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு.. கொதித்தெழுந்த ரசிகர்கள்.. நடந்தது என்ன ?