Sports
நாமக்கல் to இந்தியா - இந்திய U -20 அணியின் துணை பயிற்சியாளராகி அசத்திய தமிழர் !
இந்திய அண்டர் 20 கால்பந்து அணியின் துணைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த நல்லப்பன் மோகன்ராஜ். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவரான மோகன்ராஜ், இந்திய தேசிய அணிக்காக விளையாடியவர். ஐஎஸ்எல் தொடரில் ATK, சென்னையின் எஃப்சி போன்ற அணிகளில் விளையாடியிருக்கிறார்.
2023 ஆசிய கோப்பை தகுதிச் சுற்றில் பங்கேற்க இருக்கும் இந்தியாவின் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் துணைப் பயிற்சியாளராக இணைந்திருக்கிறார் மோகன்ராஜ். 15 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணிக்குத் தேர்வாகி முதல் முறையாக அந்த நீல நிற ஜெர்சியை அணிந்திருந்தார் அவர்.
மோகன்ராஜின் பயணம் சாதாரணமானது அல்ல. கால்பந்து பெரிதும் பிரபலம் ஆகிடாத நாமக்கல் மாவட்டத்தில் பிறந்தவர் அவர். ஒவ்வொரு கட்டத்தை அடைவதற்கும் கடுமையாக போராடவேண்டி இருந்தது. ஆரம்ப கட்டத்தில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணிக்கு (SAI) விளையாடினார் அவர். அதன் பிறகு தமிழகத்தின் 16 வயதுக்கு உட்பட்டோர் அணி, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணிகளுக்கான தேர்வுகளில் கலந்து கொண்டார். ஆனால் இரண்டு முறையுமே அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
அடுத்ததாக ஜாம்ஷெட்பூரில் இருக்கும் புகழ்பெற்ற டாடா கால்பந்து அகாடெமியில் டிரயல்ஸில் கலந்துகொள்ளச் சென்றார் மோகன்ராஜ். இங்கேயும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இருந்தாலும் அவர் மனம் தளரவில்லை. தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருந்தார். இருந்தாலும் அங்கு துணைப் பயிற்சியாளராக இருந்த முன்னாள் இந்திய வீரர் கார்ல்டன் சாப்மன், மோகன்ராஜ் தன்னுடைய இடது காலைப் பயன்படுத்தும் விதத்தை பாராட்டியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அப்போது ஐ லீக் இரண்டாவது டிவிஷனில் ஆடிக்கொண்டிருந்த ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் அணிக்கு (HAL) டிரயல்ஸுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியிருக்கிறார். அங்கு பயிற்சியாளராக கிருஷ்ணாஜி ராவும் மோகன்ராஜுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அங்கு தான் அவருடைய கால்பந்து பயணம் அடுத்த கட்டத்துக்கு நகரத் தொடங்கியது.
தனக்குக் கிடைத்த வாய்ப்பை எவ்வளவு சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள முடியுமோ அவ்வளவு பயன்படுத்திக்கொண்டார் மோகன்ராஜ். அவர் HAL அணியில் ஆடிய விதம் பெரிய வாய்ப்பு ஒன்றை அவருக்குக் கொடுத்தது. பெரியது எனில், இந்தியாவிலேயே பெரியது. ஒரு ஆண்டுக்குப் பிறகு இந்தியாவின் மிகப் பெரிய கிளப்பான மோகன் பஹான் அணியில் இணைந்தார் அவர். அந்தக் காலகட்டத்தில் இந்திய சீனியர் அணியிலும் இடம் பிடித்து அசத்தினார்.
புனே, ஸ்போர்டிங் கோவா போன்ற ஐ லீக் அணிகளுக்கு ஆடியவர், இந்தியன் சூப்பர் லீக் தொடங்கப்பட்டபோது ATK அணிக்கு விளையாடினார். முதல் சீசனிலேயே அந்த அணி சாம்பியன் பட்டமும் வென்றது. அதன்பிறகு சென்னையின் எஃப்சி அணிக்கும் விளையாடினார் மோகன்ராஜ். கடந்த சில ஆண்டுகளாக பயிற்சியாளர்களுக்கான லைசன்ஸ் பெற முயற்சி செய்தவர், சமீபத்தில் A லைசன்ஸ் பெற்றார். இப்போது தன்னுடைய பயிற்சியாளர் பயணத்தையும் தொடர்ந்திருக்கிறார். கடந்த 2 ஆண்டுகளாக கால்பந்து வர்ணனையாளராகவும், நிபுணராகவும் கூட செயல்பட்டு வந்தார் மோகன்ராஜ்.
"இந்தியா அண்டர் 20 அணிக்கு துணைப் பயிற்சியாளராக இணைந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதன் மூலம் இளம் வீரர்களுக்கு என் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள முடியும். அவர்கள் ஆட்டத்தில் ஒரு தாக்கம் ஏற்படுத்த முடியும். என்னைப் போல் இன்னும் நிறைய தமிழக வீரர்கள் பயிற்சியாளர்களாகவேண்டும் என்று நான் விரும்புகிறேன். தமிழக கால்பந்தில் நிறைய மாற்றங்கள் நிகழவேண்டியிருக்கிறது. என்னால் முடிந்த பங்களிப்பை கொடுக்க ஆசைப்படுகிறேன்" என்று கூறினார் மோகன்ராஜ்.
Also Read
-
"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!
-
”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !
-
”திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும்” : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பா.ஜ.கவின் கொத்தடிமையாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி : இரா.முத்தரசன் கடும் தாக்கு!