Sports

#CHESSOLYMPIAD : ஓபன் & மகளிர் பிரிவில் இந்திய அணி வெண்கலம் வென்று சாதனை !

2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் செஸ் ஒலிம்பியாட்டின் 44-வது போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், உலகம் முழுவதும் 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்க வரும் வீரர்கள், வீராங்கனைகள் தங்குவதற்காக சென்னை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் ஓட்டல்கள், விடுதிகளை தமிழக அரசு எடுத்துள்ளது. மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியில் 52 ஆயிரம் சதுர அடியில், நவீன விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த செஸ் போட்டியில், இந்தியா சார்பில் 6 அணிகள் களமிறங்கியுள்ளன. ஓபன் பிரிவில் 3 அணிகளும், பெண்கள் பிரிவில் 3 அணிகளும் களம் இறங்குகிறது. மொத்தம் 30 வீரர்,வீராங்கனைகள் 6 அணிகளாக களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

மொத்தம் 11 சுற்றுகள் கொண்ட இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லப்போகும் அணி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய 11 -வது சுற்று போட்டியில், ஓபன் பிரிவில் ஜெர்மனி அணியோடு இந்திய 'பி' அணி விளையாடியது. மேலும் மகளிர் பிரிவில் இந்திய A அணி அமெரிக்காவோடு விளையாடியது.

இந்த நிலையில், ஓபன் பிரிவில் இந்திய 'B' அணிக்கு வெண்கலம் கிடைத்துள்ளது. மேலும் உஸ்பெகிஸ்தான் அணி தங்கப் பதக்கம் வென்ற நிலையில், அர்மீனியா அணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.

அதோடு மகளிர் பிரிவில் இந்திய 'A' அணி தங்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வெண்கலம் வென்றுள்ளது. மேலும் உக்ரைன் அணி தங்கப் பதக்கம் வென்ற நிலையில், ஜார்ஜியா அணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.

Also Read: “கமல்ஹாசன் குரலில் 2ம் பாகம்.. கலைநிகழ்ச்சி ஏற்பாடு தீவிரம்”: நிறைவு விழா குறித்து விக்னேஷ் சிவன் பேட்டி!