Sports

"தயவுசெய்து அவரை போன்ற ஒரு வீரரை கெடுத்து விடாதீர்கள்"- டிராவிட்டை கண்டித்த இந்திய முன்னாள் வீரர் !

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்த அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

இந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியின் துவக்க வீரராக சூர்யகுமார் யாதவ் களமிறக்கப்பட்டார். ஆனால் இதுவரை நடைபெற்ற 2 டி20 போட்டிகளிலும் அவர் ஒரு ஓப்பனராக ( 24 ), (11) என மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளார். இதனால் அவரை மீண்டும் மிடில் ஆர்டருக்கே அனுப்ப வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

அதேபோல கடந்த தொடர்களில் சிறப்பாக ஆடிவந்த தீபக் ஹூடாவுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அணி கேப்டன் ரோஹித் மற்றும் பயிற்சியாளர் டிராவிட்டின் இந்த முடிவை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் டிராவிட்டின் இந்த திட்டத்தை இந்திய முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சரி ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "சூர்யகுமார் யாதவ் 4வது இடத்தில் மிகச் சிறப்பான வீரர். அந்த இடத்தில் அவர் அருமையாக ஆடிக்கொண்டிருக்கிறார். வரும் டி20 உலகக்கோப்பையிலும் அங்கு தான் அவர் விளையாட வேண்டும்.

அப்படி இருக்கையில் ஏன் தேவையின்றி அவரை ஓப்பனிங் களமிறக்கி குழப்பமடைய செய்கிறீர்கள். உங்களுக்கு ஓப்பனிங் வேண்டுமென்றால் ஸ்ரேயாஸை நீக்கிவிட்டு, இஷான் கிஷானை கொண்டு வரவேண்டியது தானே?

கிரிக்கெட் வீரர்களுக்கு தன்னம்பிக்கை மிகவும் முக்கியம். அவர் ஓப்பனிங் களமிறங்கி 2 சொதப்பல்களை பார்த்துவிட்டால், அவரின் நம்பிக்கை உடைந்துவிடும். எனவே தயவுசெய்து அவரை போன்ற சிறந்த வீரர்களை கெடுத்து விடாதீர்கள்" எனக் கூறியுள்ளார்.

Also Read: சர்வதேச போட்டிகளில் பங்கேற்க 3 ஆண்டுகள் தடை.. தேசிய சாம்பியனான தமிழக வீராங்கனைக்கு நேர்ந்த சோகம் !