Sports

"அடுத்து நான் இருப்பேனானு தெரியாது" : கிரிக்கெட் வாழ்க்கை குறித்து மனம்திறந்த ஹர்பஜன் சிங்!

ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடியபோது, தல தோனி மற்றும் சின்ன தல சுரேஷ் ரெய்னாவிற்கு அடுத்தபடியாக அதிக ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர் என்றால் அது ஹர்பஜன் சிங்காகத்தான் இருக்கும்.

கடந்த ஐ.பி.எல் போட்டியில், சென்னை அணியின் ஒவ்வொரு மேட்ச் முடிந்த பிறகும் இவரது ட்விட்டர் பக்கத்தில், ரைமிங்காக தமிழில் இவரது அட்மினால் ட்வீட் செய்யப்படும். இவரது ட்வீட்டுக்காக ஆர்வமுடன் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

தனது ட்விட்டர் பதிவுகள் மூலம் தமிழ்நாட்டு ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார். இதன் மூலம் தமிழ் படத்திலும் நடித்து விட்டார். இந்த அளவிற்குச் சென்னையுடன் கலந்த ஹர்பஜன் சிங் இந்த முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்த தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இந்நிலையில் அவரதுஎதிர்காலம் குறித்து வர்ணனையாளர் கேட்ட கேள்வி ஒன்றிற்கு ஹர்பஜன் சிங் பதிலளித்துள்ளார்.

ஹர்பஜன் சிங் கூறுகையில், "கிரிக்கெட் வீரனாக கொல்கத்தாவுடனான நேரத்தை இனிமையாகச் செலவிட்டு வருகிறேன். அடுத்த ஐ.பி.எல் தொடரில் நான் இருப்பேனா எனத் தெரியாது" எனக் கூறியுள்ளார்.

மேலும் பயிற்சியாளர் அல்லது வழிகாட்டி மாதிரியான பொறுப்புகள் கிடைத்தால் ஏற்றுக்கொள்வீர்களா என கேட்டபோது, நிச்சயமாக அதற்கான வாய்ப்பு கிடைத்தால் ஏற்றுக்கொள்வேன். கிரிக்கெட்தான் எனது வாழ்க்கை.

இந்திய கிரிக்கெட் அணிக்காக என்னால் எந்த வகையில் உதவ முடியுமோ அதற்கு நான் தயாராக உள்ளேன். அது பயிற்சியாளராக இருந்தாலும் சரி, வழிகாட்டியாக இருந்தாலும் சரி சந்தோஷத்துடன் அந்தப் பணியை அணிக்காகச் செய்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ஹர்பஜன் சிங் இதுவரை 163 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடியுள்ளார். 150 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய மூன்று அணிகளுக்காக அவர் விளையாடியுள்ளார்.

Also Read: “சன்ரைசர்ஸை வீழ்த்தி மும்பை வெற்றி.. ஆனாலும் எந்த பயனும் இல்லை” : ப்ளே ஆஃப்ஸிற்கு தகுதிப்பெற்ற கொல்கத்தா!