Sports

“சாம்பியன்களின் ஆட்டம் சீக்கிரம் முடியாது’’ - பிசிசிஐ தலைவராகப் பதவியேற்ற பின் கங்குலி பேட்டி!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 39வது தலைவராவார். மேலும், பிசிசிஐ-யின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் இரண்டாவது கிரிக்கெட் வீரர் என்னும் பெருமையையும் பெற்றுள்ளார் கங்குலி.

கங்குலியுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா செயலாளராகவும், மத்திய அமைச்சர் அனுராக் தாகூரின் தம்பி அருண் துமால் பொருளாளராகவும், கேரள கிரிக்கெட் சங்க .தலைவர் ஜெயேஸ் ஜார்ஜ் இணைச் செயலராகவும், மஹிம் வர்மா துணைத்தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

தலைவராக பொறுப்பேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த கங்குலி, “நாளை விராட் கோலியை சந்தித்துப் பேச உள்ளேன். இந்திய கிரிக்கெட் அணியில் விராட் கோலி மிக முக்கிய நபர். அவருக்கு அனைத்து வழிகளிலும் ஆதரவாக இருப்பேன். தோனியின் சாதனைகளை பட்டியலிட்டால் அது நம்மை வியப்பில் ஆழ்த்தும். சாம்பியன் வீரர்கள் தங்கள் ஆட்டத்தை விரைவில் முடித்துக்கொள்ள மாட்டார்கள்.

உள்ளூர் போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் தர உள்ளோம். இரட்டைப் பதவி ஆதாயம் குறித்தும் ஆய்வு செய்வோம். இந்திய கிரிக்கெட் வாரியம் மீதான நம்பகத்தன்மையில் எந்த சமரசமும் செய்துகொள்ள மாட்டேன். ஊழலற்ற, அனைவருக்கும் ஒரே மாதிரியான நிர்வாகமாக பிசிசிஐ இருக்கும்” எனத் தெரிவித்தார்.