Sports

“ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே எனது லட்சியம்; அதற்காக தயாராகிறேன்” - பி.வி.சிந்து பேச்சு!

கடந்த ஆகஸ்ட் மாதம் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தங்கம் வென்று சாதனை படைத்தார்.

இந்நிலையில், கேரள ஒலிம்பிக் அசோசியேஷன் சார்பில் பி.வி.சிந்துவுக்கு திருவனந்தபுரத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பி.வி.சிந்து திறந்த ஜீப்பில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். சாலையின் இருபுறமும் பொதுமக்கள் திரண்டு ‘தங்க மகள்’ சிந்துவை உற்சாகமாக வரவேற்றனர்.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற பாராட்டு விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொண்டார். மேலும் கேரள அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி. சசிதரூர் ஆகியோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

கேரள அரசு சார்பில் ரூ.10 லட்சத்திற்கான காசோலையையும், ஒலிம்பிக் அசோசியேஷனின் பரிசுக் கோப்பையையும் பி.வி.சிந்துவுக்கு பினராயி விஜயன் வழங்கி பாராட்டினார்.

பின்னர் பேசிய பி.வி.சிந்து, ''உங்களைப் போன்றவர்களின் ஊக்கம் மற்றும் ஆசீர்வாதத்தால் தான் உலக சாம்பியன் போட்டியில் என்னால் தங்கப் பதக்கம் வெல்ல முடிந்தது. 2020ம் ஆண்டு டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. அந்தப் போட்டிக்காக நான் தயாராகி வருகிறேன். ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே எனது லட்சியம்'' எனத் தெரிவித்தார்.