Sports

மிக மோசமான வர்ணனை : சஞ்சய் மஞ்ச்ரேக்கரை நீக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராகச் செயல்பட்டு வருகிறார். இவரது வர்ணனை மிக மோசமாக இருப்பதாக ரசிகர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 8 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே தோல்வியடைந்துள்ளது. ஆனால், சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இந்திய அணியின் ஆட்டம் குறித்து மிக மோசமாக வர்ணனை செய்து வருகிறார்.

கடந்த ஐபிஎல் தொடரின்போது மும்பை அணிக்கு ஆதரவாக நடந்துகொண்ட சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட அணிகளை கடுமையாக சாடி வந்தார். தோனியின் ஆட்டம் குறித்தும் தொடர்ந்து அவதூறாகப் பேசி வருகிறார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.

இந்திய வீரர்களை மோசமாக விமர்சித்து வருவதால் கோபமான கிரிக்கெட் ரசிகர்கள் உலகக்கோப்பைக்கான வர்ணனையாளர் பணியில் இருந்து சஞ்சய் மஞ்ச்ரேக்கரை நீக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக, கையெழுத்து இயக்கம் ஒன்றையும் தொடங்கி நடத்தி வருகின்றனர் ரசிகர்கள். அதில், சஞ்சய் மஞ்ச்ரேக்கரை வர்ணனையாளர் குழுவில் இருந்து நீக்க வலியுறுத்தி இதுவரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.