Politics

பொதுவாழ்வில் இருக்கும் பெண்கள் மீது அநாகரிகமான தாக்குதல்! - கனிமொழி கண்டனம்!

தமிழ்நாடு அரசியலில் பெண் ஆளுமைகளின் பங்கு மிக முக்கியமானது. ஆயிரம் ஆண்டுகாலம் பெண்களை அடிமைப்படுத்திவந்த ஆரிய வாழ்வியலை பல்வேறு போராட்டங்களின் மூலம் களைந்தெரிந்து, மக்களுக்காக பொதுவாழ்வில் இயங்கி வரும் பெண் ஆளுமைகள் ஏராளம்.

பெண் சுதந்திரத்திற்கான பல்வேறு போராட்டங்களின் வெற்றியால், இன்று பல்வேறு துறைகளிலும், அரசியலிலும், ஆட்சி அதிகாரத்திலும் பெண்கள் மேலோங்கி வருகின்றனர்.

இப்படியான நிலையில், பொதுவாழ்வில் இருக்கிற பெண்களை கருத்தியல் தொடர்பாகவும், ஆக்கப்பூர்வமாகவும் எதிர்க்க தெம்பில்லாமல், பிற்போக்குத்தனமாக தோற்றம் - ஆடை வைத்து கொச்சைப்படுத்தத் துணிந்துள்ளனர் ஆன்லைன் ஆணாதிக்கவாதிகள்.

இதனைக் கண்டித்து, தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு பின்வருமாறு,

“காலம் காலமாக, கட்சி வேறுபாடின்றி பொதுவாழ்வில் இருக்கும் பெண்கள் மீது அநாகரிகமான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் களத்தில் துணிச்சலுடன் செயலாற்றும் பெண்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல், அவர்களின் உடை, தோற்றம், தனிப்பட்ட வாழ்க்கை போன்றவற்றை வைத்து விமர்சிப்பது மலினமான அரசியலின் வெளிப்பாடாகும்.

இத்தகைய தாக்குதல்களில் ஈடுபடுபவர்களின் பிற்போக்குத்தனமான மனநிலையே இதன் மூலம் வெளிப்படுகிறது.

பெண்கள் இதையெல்லாம் கடந்தே வெற்றி பெற வேண்டும்.”

Also Read: ஒவ்வொரு தொண்டரும் ஒரு நிர்வாகி ; உடன்பிறப்புகள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த மாற்றம் : முரசொலி!