Politics

“சேலம் இரும்பாலையை நவீனப்படுத்த புதிய முதலீடுகள் செய்யப்படுமா?” - மக்களவையில் டி.ஆர்.பாலு எம்.பி கேள்வி!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று (ஜூலை 20) முதல் நடைபெற்று வரும் நிலையில், திமுக எம்.பி-க்கள் மக்கள் நலன் சார்ந்த கேள்விகளை தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.

அதன்படி, சேலம் இரும்பாலையின் உற்பத்தி திறனை உயர்த்தவும் ஆலைவசதிகளை நவீனப் படுத்திடவும் புதிய முதலீடுகளை செய்ய ஒன்றிய அரசும் "செயில்" என அழைக்கப்படும் ஸ்டீல் அத்தாரிட்டியும் ஆஃப் இந்தியா ( இந்திய எஃகு ஆணையம்) திட்டங்கள் தீட்டி உள்ளனவா? அப்படியானால் அதன் விவரங்கள் என்ன? சேலம் எஃகு ஆலையில் உற்பத்தி ஆகும் பொருட்களை ஏற்றுமதி செய்திட தேவையான முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப் படுமா? என மக்களவையில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள எஃகு துறை இணை அமைச்சர் திரு.பூபதிராஜு சீனிவாச வர்மா, சேலம் இரும்பாலை உற்பத்தி முழுத் திறனை எட்ட வில்லை.

தற்போது சேலம் ஆலையின் உருக்கும் திறன் ஆண்டுக்கு 1.8 லட்சம் டன் அளவிலும் உருட்டுத்திறன் 3.6 லட்சம் டன் அளவிலும் உள்ளன. எனினும் ஆலையின் உற்பத்தி த்திறனின் முழு அளவையும் பயன் படுத்தப் படவில்லை. எனவே, சேலம் ஆலையின் எஃகு பொருட்கள் உற்பத்தித் திறனை அதிகரிக்கவோ அதன் பொருட்டு புதிய முதலீடுகளை செய்திடவோ அரசிடம் திட்டம் எதுவும் இல்லை.

இருப்பினும், ஆலையின் இயக்கத்திறனை மேம்படுத்துதல், உற்பத்தி திறனை முழுமையாக பயன்படுத்தல், இடுபொருள் மற்றும் மின் சக்தி நுகர்வை செம்மைப்படுத்துதல், தயாரிக்கப்படும் எஃகு பொருட்களின் வகைகள் மற்றும் அவற்றின் மதிப்புக்கூட்டலை அதிகரிப்பது உள்ளிட்ட நீண்ட காலப்பயன் நல்கும் செயல் திட்டங்களையும் உத்திகளையும் கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை சேலம் எஃகு ஆலை நிர்வாகமும் செயில் நிர்வாகமும் எடுத்து வருகின்றன.

மேலும், உள்நாட்டு விற்பனையுடன் ஏற்றுமதிக்கான செயல்உத்திகளை நெறிப் படுத்திடும் செயல்களையும் ஸ்டீல் ஆத்தாரிட்டி ஆஃப் இந்தியா தீவிரப் படுத்தி உள்ளதாகவும் தனது பதில் அறிக்கையில் தெரிவித்தார்.

டி.ஆர்.பாலுவின் இந்த கேள்வி விவாதத்துக்குரிய கேள்வியாக மக்களவையில் அனுமதிக்கப் பட்டிருந்தது. ஆனால், திமுக எழுப்பிய மேகதாது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை உடனடியாக விவாதிக்க கோரி திமுக வும் பிற எதிர் கட்சிகளும் ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்தி வலியுறுத்திய நிலையில் கேள்வி நேரத்தின் போது அவைநிகழ்வுகள் முடங்கியதால் சேலம் ஆலை தொடர்பான இந்த கேளவியின் மீது அவையில் விரிவான விவாதங்கள் நடைபெற வாய்ப்பு கிடைக்கவில்லை.

Also Read: பரந்தூர் விமான நிலையம் : மாற்று இடம் கேட்காத தமிழ்நாடு அரசு - தி.மு.க MP கேள்விக்கு ஒன்றிய அரசு பதில்!