Politics

‘முதலமைச்சர் விஜயின் பேச்சை ஒளிபரப்பி அராஜகம்.. பள்ளி அறிவை வளர்க்க.. அரசியல் புகழ்பாட அல்ல’: DMK IT Wing

கரூரில் இன்று (ஜூலை 10) தவெக கட்சி சார்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு என்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் பேசினார். இந்த நிகழ்வை தமிழ்நாட்டில் உள்ள ஒரு அரசுப்பள்ளியின் ஸ்மார் போர்டு வகுப்பறையில் ஒளிபரப்பியது போன்ற வீடியோ வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் திராவிட மாடல் ஆட்சியில் ஸ்மார் போர்டு வகுப்பறையை ஏற்படுத்தி மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தியதன் விளைவாக இன்று தமிழ்நாடு பள்ளிக்கல்வியில் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

ஆனால், இன்றோ ஒரு அரசியல் கட்சி நிகழ்ச்சியை ஒளிபரப்பி பிஞ்சு உள்ளங்களில் எதை விதைக்க நினைக்கிறது தவெக அரசு என்ற கேள்வி எழுகிறது.

இதுகுறித்து கடுமையாக விமர்சித்துள்ள திமுக தகவல் தொழில்நுட்ப அணி, “பள்ளிக்கூடம் அறிவை வளர்க்கத்தான், உங்கள் அரசியல் புகழ் பாடுவதற்கு அல்ல.

தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் தங்கள் அரசியல் கைவரிசையைக் காட்டி வந்த தவெகவினர், இன்று உச்சகட்டமாக முதலமைச்சர் விஜய் பேசுவதை நேரடி ஒளிபரப்பு செய்து அராஜகம் செய்துள்ளனர். சிறு பிஞ்சு நெஞ்சுகளில் உங்கள் சுயநல அரசியல் நஞ்சை விதைக்க உங்களுக்கு எவ்வளவு துணிச்சல்?

ராஜ்மோகன் அவர்களே, ஆங்கரிங் வேலை செய்வதற்கு மட்டும்தான் இருக்கிறீர்களா அல்லது உண்மையிலேயே நீங்கள்தான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரா? பள்ளி வளாகத்தில் அரசியல் செய்யக்கூடாது என்று ஊடகங்களுக்கு ஒப்புக்கு பேட்டி கொடுத்துவிட்டு, திரைமறைவில் நாடகமாடுவதை நிறுத்துங்கள். உங்கள் வெற்று பேட்டிகளால் இங்கே எந்த மாற்றமும் வரப்போவதில்லை. குழந்தைகளிடம் அரசியல் விளம்பரம் தேடும் இந்தத் தரங்கெட்ட செயலை செயலிலும் தடுத்து நிறுத்திக் காட்டுங்கள்.

அரசியல் செய்ய ஆயிரம் மேடைகள் இருக்கின்றன, அங்கே போய் உங்கள் புகழைப் பாடிக்கொள்ளுங்கள். வகுப்பறைகளை உங்கள் சுய விளம்பரக் களமாக மாற்ற நினைத்தால் தமிழ்நாட்டு மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள்” என எச்சரித்துள்ளது.