Politics

“அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

இந்திய வல்லாதிக்கத்தால் தமிழ்நாடு உள்ளிட்ட மொழிவழி மாநிலங்களில் ‘இந்தி மொழி’ திணிக்கப்பட்டபோது, அதற்கு எதிராக முன்னின்று போராடி உயிர்நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஜன.25 அன்று ‘மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள்’ அனுசரிக்கப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய நாள் (ஜன.25) தி.மு.க தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 1938-ஆம் ஆண்டு மொழிப்போர்க் களத்தின் முதற்கட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த நடராசன், தாளமுத்து மற்றும் மொழிப்போர் வீராங்கனை அன்னை தருமாம்பாள் ஆகியோருக்கு அவர்களது நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தினார்.

மேலும், சென்னை எழும்பூரில் அமைந்துள்ள தாளமுத்து நடராசன் மாளிகையில் அவர்களது திருவுருவச் சிலைகளையும் திறந்து வைத்தார்.

இதனையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் இதுகுறித்து பதிவிட்டது பின்வருமாறு,

“வீரவணக்கம், வீரவணக்கம்! மொழிப்போர்த் தியாகிகளுக்கு வீரவணக்கம்!

மொழியை உயிராய் நேசிக்கும் ஒரு மாநிலம், இந்தித் திணிப்புக்கு எதிராக ஒன்றுதிரண்டு போராடியது. திணித்த ஒவ்வொரு முறையும் அதே வீரியத்தோடு போராடியது.

இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள பல்வேறு மொழிவழித் தேசிய இனங்களின் உரிமையையும் அடையாளத்தையும் காத்தது.

தமிழுக்காகத் தங்கள் இன்னுயிரையே ஈந்த அந்தத் தியாகிகளை நன்றியோடு வணங்குகிறேன்.

மொழிப்போரில் இனி ஒரு உயிரும் போகாது; நம் தமிழுணர்வும் சாகாது! இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்! அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை!”

Also Read: 44 காவல்துறையினருக்கு குடியரசு தின பதக்கங்கள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!