Politics

நீதிபதி யஸ்வந்த் வர்மா மீது நாடாளுமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கவேண்டும் - காங்கிரஸ் கோரிக்கை !

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த மார்ச் 14ஆம் தேதியன்று திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்போது நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில், கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு புகார் கொடுக்கப்பட்ட நிலையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா ஏற்கெனவே பணியாற்றி வந்த அலகாபாத் நீதிமன்றத்துக்கே அவரை பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஸ்வந்த் வர்மா மீது நாடாளுமன்றம் மூலம் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விவேக் தங்கா மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு அவர் கடிதம் எழுதி உள்ளார். அதில் கடந்த மார்ச் 21 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து எழுப்பப்பட்டது. அதன் பிறகு உச்சநீதிமன்றம் நடத்திய விசாரணை அறிக்கை தற்போது பிரதமருக்கும் குடியரசுத் தலைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதன் நகல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

இந்த விவகாரத்தில் தற்போது உள்ள சட்டப்படி நாடாளுமன்றம் மூலம் மட்டுமே ஒரு நீதிபதியின் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அரசியல் சாசன பிரிவு 124, 217 ஆகிய பிரிவுகள் நாடாளுமன்றத்துக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளது. குடியரசு தலைவர் தன்னிச்சையாக இதன் மீது முடிவு எடுக்க முடியாது. எனவே தற்போது உள்ள விசாரணை அறிக்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு அரசியல் சாசன வழிகாட்டுதல் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.