Politics

தேசிய அளவில் தி.மு.க.வால் நெருக்கடியில் பா.ஜ.க - தி இந்து ஆங்கில நாளிதழ் வெளியான தலையங்கம் !

கட்டாயக் கூட்டணி என்ற தலைப்பில் தி இந்து ஆங்கில நாளிதழ் தலையங்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அரசியல் சுயலாபங்களுக்காகவே அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாகவும், சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு வருடம் உள்ள நிலையில், அதிமுகவுடன் பாஜக மீண்டும் இணைந்துள்ளது, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பதற்றத்தை வெளிப்படுத்தி உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக மாநிலங்களவையில் வாக்களித்த அ.தி.மு.க., பா.ஜ.க.-வுடன் கூட்டணி வைத்திருப்பது முரண்பாடாக உள்ளதாகவும், வரும் காலங்களில் சுயேட்சையான அரசியில் நிலைபாடுகளை மேற்கொள்ளும் வாய்ப்பை அதிமுக இழக்க நேரிடும் என்றும் தி இந்து தலையங்கம் தெரிவித்துள்ளது.

தேசிய அளவில் தி.மு.க.-வுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் கிடைத்து வரும் முக்கியத்துவம் பா.ஜ.க.-வுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள இத்தலையங்கம், நியாமான தொகுதி மறுசீரமைப்பை வலியுறுத்தி 7 மாநில அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் கூட்டு நடவடிக்கைக் குழுவை தமிழ்நாடு முதலமைச்சர் அமைத்துள்ளதையும் சுட்டிக்காட்டி உள்ளது.

மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட விவகாரங்களில் திமுகவின் கொள்கைகளையே கடைபிடிப்பதாகக் கூறும் அதிமுக, பாஜகவுடன் பொதுவான செயல்திட்டங்களை உருவாக்க முடியுமா எனவும் கேள்வி எழுப்பி உள்ள இத்தலையங்கம், கூட்டணி உறுதியாகிவிட்டாலும், தொகுதி பங்கீட்டை இறுதி செய்வது பெரும் சவாலாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், கூட்டணி குறித்த அமித்ஷாவின் பேச்சுக்கள், ஒன்றிய விசாரணை அமைப்புகளுக்கு தமிழ்நாட்டில் அரசியல் நோக்கத்துடன் கூடிய பணிகள் அளிக்கப்பட்டுள்ளதை வெளிப்படுத்தி உள்ளதாகவும் தி இந்து தலையங்கம் தெரிவித்துள்ளது.