Politics

IIT-யிலேயே 45% மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை - மோடி ஆட்சியில் மோசமான நிலையை நோக்கி செல்லும் இந்தியா !

மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே வேலையின்மை அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா காலத்தில் லட்சக்கணக்கானோர் வேலைகளை இழந்து வீதிக்கு வந்தனர்.அதேபோல் பொருளாதாரமும் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. மக்கள் விலைவாசி உயர்வால் அவதிப்பட்டு வரும் வேலையிலும் பெட்ரோல், டீசல், சிலிண்டர், உணவு பொருட்களின் விலையையும் ஒன்றிய அரசு தொடர்ச்சியாக உயர்த்தி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என கூறி ஒன்றியத்தில் ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க. ஆனால் 10 ஆண்டுகால ஆட்சியில் அவர்கள் இளைஞர்களுக்காகக் கொடுத்த வாக்குறுதியில் 10%ம் கூட நிறைவேற்றவில்லை.வீதிக்கு வீதி வேலை இல்லாமல் இளைஞர்கள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், புகழ்பெற்ற ஐஐடி-யில் படிக்கும் 45% மாணவர்களுக்கு இன்னும் வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் உச்சப்பட்ச கல்வி அமைப்பான ஐஐடி-யில் படிக்கும் மாணவர்களை கல்லுரியில் கலந்தாய்வு நடத்தி நிறுவனங்கள் வேலை வாய்ப்பு வழங்கும். இதனால் படித்து முடிக்கும் முன்பே அவர்களுக்கு வேலை கிடைத்திருக்கும்.

ஆனால், தற்போது ஐஐடி-யில் படிக்கும் மாணவர்களுக்கே வேலைவாய்ப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. ஐஐடி கான்பூரின் முன்னாள் மாணவரான தீரஜ் சிங் சமீபத்தில் ஆர்டிஐ மூலம் சில தகவல்களைப் பெற்றிருந்தார். அதன் படிப்படையில் அதை வைத்து தான் அவர் இந்தாண்டு 45% மாணவர்களுக்கு வேலை கிடைக்காது என்ற தகவல் அவருக்கு கிடைத்துள்ளது.

2024ஆம் ஆண்டு ஆண்டு கலந்தாய்வுக்காக 2,100 மாணவர்கள் பதிவு செய்துள்ள நிலையில், அதில் 1,150 மாணவர்களுக்கு மட்டுமே இதுவரை வேலை கிடைத்துள்ளது. அதே நேரம் 950 மாணவர்கள் இன்னும் வேலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. ஐஐடி மாணவர்களுக்கே இந்த நிலைமை என்றால், அது நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் தீவிர நிலையில் இருப்பதை உணர்த்துவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.