Politics

கட்சிகளுடன் தொடர்பிருப்பதாக ஒப்புக்கொள்ள கூறி சித்ரவதை : நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளிகள் புகார் !

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், கடந்த டிசம்பர் 13-ம் தேதி நடைபெற்று கொண்டிருந்து . அப்போது திடீரென பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து சாகர் சர்மா, மனோரஞ்சன் ஆகிய 2 நபர்கள் அரங்கிற்குள் சட்டென்று குதித்தனர்.அவர்கள் கோஷமிட்டுக்கொண்டே, தாங்கள் கொண்டு வந்த புகை குண்டுகளையும் வெடிக்க செய்தனர்.

இதனால் அங்கு சற்று சலசலப்பு ஏற்பட்ட நிலையில், அந்த நபர்களை அங்கிருந்த சில எம்.பிக்கள் துரத்தி பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் விசாரிக்கையில், 5 பேர் சேர்ந்து இந்த திட்டத்தில் ஈடுபட்டதும்,இந்த தாக்குதலுக்கு 18 மாதங்களாக அந்த கும்பல் திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து அவர்கள் 5 பேர் மீது UAPA சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய இந்த நபர்களுக்கு கர்நாடக பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹாவே பாஸ் வழங்கியதும் விசாரணையில் வெளிவந்தது. பின்னர் இது குறித்து விவாதம் நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்த 100-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை பாஜக அரசு சஸ்பெண்ட் செய்தது.

இந்த நிலையில் , நாடாளுமன்ற தாக்குதல் நடத்தியவர்களை ஒன்றிய அரசின் காவல்துறை சித்ரவதை செய்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் டெல்லி பட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

அதில், டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவின் கீழ் இருந்தபோது, 70க்கும் மேற்பட்ட வெற்று காகிதங்களில் கையெழுத்திட வற்புறுத்தப்பட்டதாக கூறியுள்ளனர். மேலும், ஏபிஏ சட்டத்தின் கீழ் குற்றத்தை ஒப்புக்கொள்வதற்கும், தேசிய அரசியல் கட்சிகளுடனான தொடர்பினை ஒப்புக்கொள்வதற்கும் வற்புறுத்தப்பட்டுள்ளனர். அதனை அவர்கள் ஒப்புக்கொள்ள மறுத்த நிலையில், அவர்களை சித்ரவதை செய்து, மின்சார அதிர்வலைகளைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவிடம் பதில் கேட்டுள்ள நீதிமன்றம் விசாரணையை பிப்ரவரி 17 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்ட 6 பேரின் நீதிமன்றப் காவல் மார்ச் 1 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஒன்றும் இல்லாத பட்ஜெட் : ஒன்றிய பாஜக அரசின் இறுதி நிதிநிலை அறிக்கையை விமர்சித்த எதிர்க்கட்சிகள் !