Politics

"நாடாளுமன்ற தாக்குதலுக்கு ஒன்றிய அரசு பொறுப்பு கிடையாது" - பாஜக எம்.பியின் கருத்தால் சர்ச்சை !

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், கடந்த 13-ம் தேதி நடைபெற்று கொண்டிருந்து . அப்போது திடீரென பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து சாகர் சர்மா, மனோரஞ்சன் ஆகிய 2 நபர்கள் அரங்கிற்குள் சட்டென்று குதித்தனர்.அவர்கள் கோஷமிட்டுக்கொண்டே, தாங்கள் கொண்டு வந்த புகை குண்டுகளையும் வெடிக்க செய்தனர்.

இதனால் அங்கு சற்று சலசலப்பு ஏற்பட்ட நிலையில், அந்த நபர்களை அங்கிருந்த சில எம்.பிக்கள் துரத்தி பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் விசாரிக்கையில், 5 பேர் சேர்ந்து இந்த திட்டத்தில் ஈடுபட்டதும்,இந்த தாக்குதலுக்கு 18 மாதங்களாக அந்த கும்பல் திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து அவர்கள் 5 பேர் மீது UAPA சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய இந்த நபர்களுக்கு கர்நாடக பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹாவே பாஸ் வழங்கியதும் விசாரணையில் வெளிவந்தது. பின்னர் 14-ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் நடந்த தாக்குதல் குறித்து விவாதம் செய்யவும், உள்துறை அமித்ஷா பதவி விலகவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.

இதனிடையே இந்த தாக்குதலுக்கு பின்னர் நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே நாடாளுமன்றத்தில் நடந்த இந்த தாக்குதலுக்கு ஒன்றிய அரசு பொறுப்பு கிடையாது என கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "மக்களவையின் பாதுகாப்பு என்பது, மக்களவைச் செயலகத்தின் பொறுப்புதான். அது ஒன்றிய அரசின் பொறுப்பு கிடையாது.

ஆனால், எதிர்க்கட்சிகள் உள்துறை அமைச்சர் அமித்ஷா இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். உள்துறை அமைச்சர் ஏன் இதற்கு பதிலளிக்க வேண்டும்? இன்றைக்கு மூன்று முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும். ஆனால், காங்கிராஸ் இன்று அவையைச் செயல்பட விடவில்லை" என்று கூறியுள்ளார்.

Also Read: “பொழுதுபோக்கிற்காக உங்கள் மனுவை விசாரிக்கவில்லை”: IAS- IAS அதிகாரிகள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்