Politics

"மோடியின் சொந்த தொகுதியில் மாணவிகளுக்கு கல்வி நிலையத்தில்கூட பாதுகாப்பில்லை" -பிரியங்கா காந்தி விமர்சனம்!

கடந்த நவம்பர் 2ம் தேதி வாரணாசி ஐஐடி வளாகத்தில் இரவு நேரத்தில் மாணவி ஒருவர் தனியாக நடந்துசென்றுள்ளார். அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேர் அந்த மாணவியை யாரும் இல்லாத பக்கம் இழுத்துச் சென்றுள்ளனர்.

பின்னர், ஐஐடி வளாகத்தினுள் வைத்தே அந்த கும்பல் பெண் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அதோடு அந்த மாணவியை தவறாக வீடியோ எடுத்து அந்த மாணவியை மிரட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அந்த மாணவி வாரணாசி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நாட்டின் உச்சபட்ச கல்வி நிறுவனமான ஐஐடி-யில் நடைபெற்ற மாணவி ஒருவருக்கு நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் மாணவிகள் தங்கள் கல்வி நிலையத்திற்குள் கூட சுதந்திரமாக நடக்க முடியாத சூழல் நிலவுகிறது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "ஐஐடி வளாகத்தினுள் வைத்தே ஒரு மாணவி பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அதனைக் குற்றவாளிகள் வீடியோவாகவும் எடுத்துள்ளனர். நாட்டின் உயர்ந்த கல்வி நிலையங்களாக உருவாக்கப்பட்ட ஐஐடி-க்கள் தற்போது பாதுகாப்பற்றவையாக மாறி வருகின்றனவா?

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் மாணவிகள் தங்கள் கல்வி நிலையத்திற்குள் கூட சுதந்திரமாக நடக்க முடியாத சூழல் நிலவுகிறது" என்று விமர்சித்துள்ளார். இதே போல பல்வேறு கட்சி தலைவர்களும் இந்த சம்பவத்தை குறிப்பிட்டு அரசை விமர்சித்து வருகின்றனர்.

Also Read: டாக்டர் பட்டம் விவகாரம் : “டாக்டர் பட்டத்தைவிட ‘சங்கரய்யா’ என்ற பெயர்ச்சொல் மேலானது”- வைரமுத்து !