Politics

இந்தியாவில் நடைபெறும் G20 மாநாட்டை புறக்கணித்த சீனா.. பின்னணியில் அமெரிக்கா, ஜப்பான்.. முழு விவரம் என்ன ?

ஆண்டுதோரும் ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கு சுழற்சி முறையில் வழங்கப்படும். அந்த வகையில் இந்த முறை இந்த ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டுக்கான ஜி-20 கூட்டமைப்பு மாநாடு இந்தியாவின் தலைநகர் டெல்லியில் வரும் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், சௌதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் உள்ளிட்ட முக்கிய உலகத் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இதற்கான ஏற்பாட்டில் ஒன்றிய அரசு தீவிரமாக இறங்கி செயல்பட்டு வருகிறது.

அதேநேரம் இந்த கூட்டத்துக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் கலந்துகொள்ளமாட்டார் என்றும், அவருக்கு பதில் சீன பிரதமர் லி கியாங் கலந்துகொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதற்கு பல்வேறு அரசியல் காரணங்களும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீனா தனது புதிய தேச வரைப்படத்தை அண்மையில் வெளியிட்டிருந்தது. அதில் அருணாசலப் பிரதேசம் மற்றும் அக்ஷய் சின் பகுதிகள் சீனாவுக்கு சொந்தமானவை என குறிப்பிட்டிருந்தது. இதன் காரணமாக இந்தியாவுக்கு சீனாவுக்கும் இடையே சில கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இது தவிர தைவான் விவகாரத்தில் சீனா அமெரிக்க உறவுகள் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. இதனால் அமெரிக்கா ஆதரவு நாடுகள் அதிகம் இருக்கும் கொண்ட ஜி-20 கூட்டமைப்பில் பங்கேற்கவேண்டாம் என்றும் சீன அதிபர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தென்சீனக் கடல் விவகாரத்தில் சீனா -ஜப்பான் இடையேயும் மோசமான உறவுகள் இருக்கும் நிலையில், அதுவும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

சீன அதிபரைப் போல ரஷ்ய அதிபர் புதினும் இந்த ஜி-20 கூட்டமைப்பு மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை என அறிவித்துள்ளார். இதற்கு உக்ரைன் -ரஷ்யா போரே முதன்மையான காரணமாக பார்க்கப்படுகிறது. இப்படி முக்கிய தலைவர்கள் இந்த மாநாட்டுக்கு வராததை மேற்கத்திய ஊடகங்கள் முக்கிய செய்தியாக வெளியிட்டுள்ளனர்.

Also Read: மணிப்பூர் : தடுப்புகளை நீக்க ஊர்வலம் சென்ற போராட்டகாரர்கள்.. தாக்குதல் நடத்திய பாதுகாப்பு படையினர் !