Politics

சிறுபான்மையினருக்கு எதிராக கருத்து.. விக்டோரியா கெளரி நீதிபதியாக நியமிக்கப்பட்டதற்கு எதிரான மனு தள்ளுபடி!

விக்டோரியா கௌரி என்பவர் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாஜகவில் இணைந்து சுமார் ஒருவருடம் அதில் உறுப்பினாக இருந்தார். பா.ஜ.க.வில் அவர் மகிளா மோர்ச்சாவின் தேசிய பொதுச் செயலாளராகவும் பதவி வகித்தார். அப்போது அவரின் ட்விட்டர் பதிவில் கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்புணர்வு கருத்துகள் அதிக அளவு இடம்பெற்றிருந்தது.

பின்னர் பாஜகவில் இருந்து விலகிய அவர், மதுரையில் உள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் பெஞ்ச்சில் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து விக்டோரியா கௌரியை சென்னை உயர்நீதிமரண நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் சமீபத்தில் வழங்கியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் சர்ச்சையானது.

மேலும், விக்டோரியா கௌரியை நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் வழங்கிய பரிந்துரைகளை திரும்பப் பெறுமாறு மூத்த வழக்கறிஞர்களான என்.ஜி.ஆர்.பிரசாத், வைகை உள்ளிட்ட 21 பேர் கோரிக்கை வைத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினர்.

அதன் தொடர்ச்சியாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கௌரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவியேற்க உள்ள நிலையில், இந்த வழக்கு அவசரமாக விசாரிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகளின் நியமனத்துக்கு சில தகுதிகள் உள்ளன. அது இவரது நியமனத்தில் கருத்தில் கொள்ளப்படவில்லை.சமூக ஊடக பதிவை சுட்டிக்காட்டி சில நீதிபதிகள் நியமன பரிந்துரையை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிக்கப்பட்டது.

மேலும், விக்டோரியா கவுரி எழுதியுள்ள கட்டுரைகளை பார்த்தால் அவர் பதவி ஏற்க தகுதியும் இல்லாதவர் என்பதை தெரிந்துகொள்ளலாம் எனவும், அவரது கருத்துகள் அனைத்தும் வெறுப்பு பேச்சில் வருபவை. எனவே இதனை அரிதான பிரச்னையாக கருத வேண்டும், இந்த விவகாரம் கொலிஜியம் கவனத்துக்கு செல்லாமல் இருந்திருக்கலாம் எனவும் மனுதாரர் தரப்பில் விவாதிக்கப்பட்டது.

ஆனால், அரசியல் பின்னணி உள்ளவர்கள் ஏற்கனவே நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர் தற்போது கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். பதவி பிரமாணத்தை மீறி செயல்பட்டால் அதனை கவனிக்க உரிய வாய்ப்பு உள்ளது என நீதிபதிகள் கூறிய நிலையில், கொலிஜீயத்தின் பரிந்துரையை திரும்பபெற் உத்தரவிட முடியாது. வேறு எந்த உத்தரவையும் இந்த சூழ்நிலையில் பிறப்பிக்க இயலாது எனக் கூறி இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

அதே நேரம் அவர் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்படும் முன் ஒரு வருடங்கள் அவருடைய செயல்பாடுகள் பரிசீலிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து விக்டோரியா கௌரி உள்ளிட்ட 5 பேர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பொறுப்பேற்றனர்.