Politics

BBC : “இப்படி சொன்னால் அது அண்ட புளுகு.. ஆகாசப் புளுகு..” - மோடி அரசை கடுமையாக விமர்சித்த திருமாவளவன் !

அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்பு சட்டம் இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளை, முன்னிட்டு சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகமான அம்பேத்கர் திடலில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தை யாரும் பார்க்காதபடி தடை செய்து இணையத்தில் முடக்குவது கருத்துரிமை பறிக்கிற அடாவடி செயல், என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்தியா பொருளாதார வளர்ச்சி கண்டிருக்கிறது என்று சொன்னால் எல்லோரும் நகைப்பார்கள். எட்டு ஆண்டுகளில் மோடி தலைமையில் எவ்வளவு பெரிய சரிவை சந்தித்து இருக்கிறது என்று அனைவரும் அறிவார்கள். பணமதிப்பு வீழ்ச்சி அகல பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது. பொருளாதாரத்தில் இந்தியா முன்னேறி இருக்கிறது என்று சொல்வது அண்ட புளுகு ஆகாசப் புளுகு.

மோடி குஜராத்தில் முதலமைச்சராக இருந்த காலத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறையை தூண்டினார். அவரது உரை வன்முறைக்கு எதிராக இருந்தது என்று படம் பிடித்து காட்டி இருக்கிறது பிபிசி.

உண்மை அறியும் குழு தரவுகளைத் திரட்டி ஆவணப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது, உடனே அதை யாரும் பார்க்காதபடி தடை செய்வது இணையத்தில் முடக்குவது கருத்துரிமை பறிக்கிற அடாவடி செயல் மோடி அரசு பொதுமக்கள் பார்க்காமல் தடுப்பது கண்டனத்துக்குரியது.

திரிபு வாதம்தான் சங்பரிவார்களின் முக்கிய அரசியல். நான் சொல்லும் கருத்து அரசியலை திரித்து பேசுவதை நடைமுறையாக பின்பற்றி வருகின்றனர்.

வேங்கை வயல் பிரச்சனை குறித்து இதுவரை பாஜக வாய் திறக்கவில்லை. ஆறுதல் சொல்ல கூட தயாராக இல்லை. அவர்களது பாஷையில் பாதிப்புக்கு உள்ளவர்கள் இந்துக்கள் தான். ஆனால் அமைதி பார்க்கிறார்கள்; அவர்கள் தான் சாதியவாதிகள், சனாதனவாதிகள். இதனை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு சாதியவாதி என்ற முத்திரை குத்துவது திரிபுவாத முயற்சி.

வேங்கை வயல் விவகாரத்தில் இரண்டு முறை போராட்டம் நடத்தி இருக்கிறோம் .சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்திருக்கிறோம். சிபிசிஐடி விசாரணையில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்; பொறுத்திருந்து பார்ப்போம். தமிழ்நாடு அரசு இதில் உறுதியாக இருந்து உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது.

எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய யாரும் வேங்கை வயல் பற்றி பேசவில்லை. எந்த நோக்கத்திற்காக யாருக்கு அச்சப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. மனிதாபிமானம் என்கிற பார்வை இருக்கிறதா இல்லையா என்று ஐயப்ப படக்கூடிய வகையில் இருக்கிறது.

பட்டியல் சமூகத்தை சார்ந்த ராம்நாத் கோவிந்த், பழங்குடி சமூகத்தை சார்ந்த பெண்ணை குடியரசுத் தலைவராக அமர வைத்தோம் என்று பெருமை பேசுகிறார்கள். ஆனால் இந்தியா முழுவதும் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்த இந்திய ஒன்றிய அரசு கவலைப்பட்டதாக தெரியவில்லை; ஏன் நடைமுறைப்படுத்தவில்லை என்று கண்காணிக்க இந்திய பொறுப்பு ஒன்றிய அரசுக்கு இருக்கிறது

இந்தியா முழுவதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை 10 சதவிகிதம் பேர் இதுவரை தண்டிக்கப்படவில்லை என்பது வெட்கக்கேடான ஒன்று. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்தினால் மட்டுமே வன்கொடுமைகளை தடுக்க முடியும் என்று வேண்டுகோள் விடுகிறோம்.

Also Read: “உங்களுக்கும் எங்களுக்கும் பஞ்சாயத்து வேண்டாம்..” - ஒன்றிய அரசை வெளுத்து வாங்கிய கனிமொழி எம்.பி. !