Politics
சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு.. தமிழ்நாடு ஆளுநர் பதவி விலகுவதே மரியாதை -தி.க.தலைவர் வீரமணி அறிக்கை !
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பாதியிலேயே வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பொதுவாக எதிர்க்கட்சிகளே இது போன்று கொள்கை சார்ந்து வெளிநடப்பு செய்யும் நிலையில், சுதந்திரம் அடைந்து 70 வருட சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக ஆளுநர் ஒருவர் சட்டப்பேரவையில் இருந்து பாதியிலேயே வெளியேறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தேசிய கீதத்தையும் ஆளுநர் புறக்கணித்துள்ளது சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து ட்விட்டரில் #GetOutRavi என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆளுநரை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "ஆளுநர் உரை என்பது மாநில அரசு எழுதிக் கொடுத்ததை அட்சரம் பிசகாமல், பிறழாமல் படிப்பதுதான் - அதுதான் மரபும், சட்டமும் ஆகும்.ஆனால், தமிழ்நாட்டின் ஆளுநராக இருக்கக் கூடிய திரு.ஆர்.என்.இரவி அவர்கள் ஆளுநராகப் பொறுப்பேற்றது முதல், சட்ட விரோதமாகவும், தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும், மதச் சார்பின்மைக்கு மாறாகவும் பேசி வருகிறார் - நடந்து வருகிறார்.
அதில், உச்சக்கட்டமாக ஆளுநர் உரையில் இன்று (9.1.2023) தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த (அதற்கு ஏற்கெனவே ஆளுநர் ஒப்புதலும் கொடுத்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது).அறிக்கையில் இல்லாததைப் படிப்பதும், அறிக்கையில் இடம் பெற்றிருந்த தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் பெயர்களைப் படிக்காமல், உதாசீனம் செய்ததும் கண்டிக்கத்தக்கதாகும்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதுவரை நடந்திராத அநாகரிக செயலாகும் இது.இதனைத் திராவிடர் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.ஆளுநரின் இந்த சட்ட மீறலை, மரபு மீறலை முதலமைச்சர் சுட்டிக்காட்டி, ஏற்கெனவே ஆளுநர் ஒப்புக்கொண்டு, அச்சிடப்பட்டுள்ள உரை மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறும் என்று அறிவித்தது - 'திராவிட மாடல்' அரசின் நாயகர் என்பதற்கான அடையாளமே!தமிழ்நாடு ஆளுநர் பதவி விலகலே மரியாதையாகும்! " என்று கூறியுள்ளார்.
Also Read
-
“ஆளுநரின் இந்த துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“குதிரை பேரத்தில் No 1 குற்றவாளி விஜய் தான்” : கழக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றச்சாட்டு!
-
தவெக ஆட்சியில் ‘அரசு வழக்கறிஞர்’ பதவிக்கு ரூ.30 லட்சம் வரை லஞ்சம்! : திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம்!
-
“த.வெ.க வாஷிங் மெஷினில் புனிதர்களாகும் ஊழல் வாதிகள்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!
-
லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர் நியமனம்... தவெக அரசுக்கு எதிராக வழக்கு போட்ட தவெக வழக்கறிஞர் - விவரம்!