Politics
சந்திரபாபு நாயுடு தலைமையில் பிரம்மாண்ட பேரணி.. முண்டியடித்த தொண்டர்களில் 8 பேர் பரிதாப பலி !
ஆந்திர பிரதேச மாநிலத்தில் எதிர்க்கட்சியாக தெலுங்கு தேசம் கட்சி இருக்கிறது. இந்த கட்சியின் தலைவரும் அம்மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு அம்மாநில ஆளுங்கட்சிக்கு எதிராக 'இதேமி கர்மா மன ராஷ்டிரனிகி (நம் மாநிலம் ஏன் இந்த விதியை எதிர்கொள்கிறது?)' என்று சாலை பேரணி ஒன்று அறிவித்திருந்தார். இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொள்ள ஆர்வம் காட்டினர்.
பேரணியின் ஒரு பகுதியாக நேற்று நெல்லூர் மாவட்டத்தில் கந்துகூர் நகரில் உரையாற்ற இருந்தார். அதன்படி, நாயுடுவின் கான்வாய் மாலையில் அப்பகுதியை அடைய தொடங்கியதும் கூட்ட நெரிசல் அலைமோதியது. அங்கு திரண்டிருந்த ஏராளமான மக்கள் சந்திரபாபு நாயுடுவை காண முண்டியடித்தனர்.
இந்த நெரிசல் நேரமாக ஆக அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் அங்கிருந்த வடிகால் கால்வாயின் சிமெண்ட் தளம் உடைந்து, அதனுள் தொண்டர்கள் பலரும் விழுந்தனர். இந்த விபத்தில் சிக்கிய ஒரு பெண் உட்பட மொத்தம் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதோடு படுகாயமடைந்த சிலர் உள்ளூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கோர விபத்தின் காரணமாக தனது கூட்டத்தை சந்திரபாபு நாயுடு ரத்து செய்தார். மேலும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியாக அறிவித்ததுடன், அந்த குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் கல்வி செலவையும் ஏற்பதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வரும் 2024-ம் ஆண்டு ஆந்திராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராக உள்ள சந்திரபாபு நாயுடு மாநிலம் முழுவதும் தொடர் கூட்டங்களை நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக இந்த கூட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
சோறா.. இட்லியா.. கல்லா.. சமூகநீதி விடுதியில் மாணவர்களுக்கு நேரும் அவலம் - நடவடிக்கை எடுப்பாரா வன்னியரசு?
-
சிவகங்கையில் அமைச்சர் நிர்மல் குமாரை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்! : நாவடக்கம் தேவை என அறிவுறுத்தல்!
-
“இது நீதியா? நியாயமா? மனிதாபிமானம் கொண்டு பார்த்தால்தான் நீதி தெரியும்!” : பெ.சண்முகம் கண்டனம்!
-
“விவசாயிகளுக்கு நிதி இல்லை; ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார்!” : தஞ்சையில் உதயநிதி கண்டனம்!
-
த.வெ.க ஆட்சியில் சட்டமன்றமே ‘ரீல்’சிற்காகத்தான் நடத்தப்படுகிறது! : கனிமொழி எம்.பி விமர்சனம்!