Politics
சந்திரபாபு நாயுடு தலைமையில் பிரம்மாண்ட பேரணி.. முண்டியடித்த தொண்டர்களில் 8 பேர் பரிதாப பலி !
ஆந்திர பிரதேச மாநிலத்தில் எதிர்க்கட்சியாக தெலுங்கு தேசம் கட்சி இருக்கிறது. இந்த கட்சியின் தலைவரும் அம்மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு அம்மாநில ஆளுங்கட்சிக்கு எதிராக 'இதேமி கர்மா மன ராஷ்டிரனிகி (நம் மாநிலம் ஏன் இந்த விதியை எதிர்கொள்கிறது?)' என்று சாலை பேரணி ஒன்று அறிவித்திருந்தார். இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொள்ள ஆர்வம் காட்டினர்.
பேரணியின் ஒரு பகுதியாக நேற்று நெல்லூர் மாவட்டத்தில் கந்துகூர் நகரில் உரையாற்ற இருந்தார். அதன்படி, நாயுடுவின் கான்வாய் மாலையில் அப்பகுதியை அடைய தொடங்கியதும் கூட்ட நெரிசல் அலைமோதியது. அங்கு திரண்டிருந்த ஏராளமான மக்கள் சந்திரபாபு நாயுடுவை காண முண்டியடித்தனர்.
இந்த நெரிசல் நேரமாக ஆக அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் அங்கிருந்த வடிகால் கால்வாயின் சிமெண்ட் தளம் உடைந்து, அதனுள் தொண்டர்கள் பலரும் விழுந்தனர். இந்த விபத்தில் சிக்கிய ஒரு பெண் உட்பட மொத்தம் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதோடு படுகாயமடைந்த சிலர் உள்ளூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கோர விபத்தின் காரணமாக தனது கூட்டத்தை சந்திரபாபு நாயுடு ரத்து செய்தார். மேலும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியாக அறிவித்ததுடன், அந்த குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் கல்வி செலவையும் ஏற்பதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வரும் 2024-ம் ஆண்டு ஆந்திராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராக உள்ள சந்திரபாபு நாயுடு மாநிலம் முழுவதும் தொடர் கூட்டங்களை நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக இந்த கூட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனக் குழு : த.வெ.க அரசின் முடிவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு!
-
கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1 : தலைமறைவாக இருந்த நிர்மல் குமாருக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!