Politics
"ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜக கட்சி வேலையை பாருங்கள்": ஆளுநர் ரவி-க்கு முத்தரசன் கண்டனம்!
ஆளுநர் ஆர்.என். ரவி ஆளுநர் வேலையை மட்டும் பாருங்கள் அல்லது பா.ஜ.க-வின் வேலையைப் பார்க்க வேண்டும். ஒரே நேரத்தில் இரண்டு வேலையும் பார்க்க முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், "அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகவும் அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கியுள்ள அமைப்புகளைச் சீர்குலைக்கக் கூடிய வகையிலும் ஒன்றிய அரசின் செயல்பாடு வருகிறது. மேலும் மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிராக பா.ஜ.க அரசின் அணுகுமுறை இருக்கின்றது.
ஒன்றிய அரசு புதுப்புது மக்கள் விரோத சட்டங்களைக் கொண்டு வருகிறது. தொழிலாளர் விதவைச் சட்டம், கல்விக் கொள்கை, மின்சார திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத சட்டங்களைக் கொண்டு வருகிறது. ஒன்றிய அரசு நினைத்தால் யார் அனுமதியும் இன்றி தானாக ஒரு சட்டத்தை நிறைவேற்றக்கூடிய அளவிற்கு அவர்களின் பலம் உள்ளது. அதனால் மின்சார திருத்தச் சட்ட மசோதாவை வலுக்கட்டாயமாகத் திணிக்கிறது.
போலிஸாரால் தேடப்படும் வன்முறையாளர்கள் பா.ஜ.க கட்சியில் தான் சேர்கிறார்கள். அவர்களுக்கு பா.ஜ.க அடைக்கலம் கொடுத்து வருகிறது. என்ன தவறு வேண்டுமானாலும் செய்யலாம் கொள்ளையடிக்கலாம் எத்தகைய வன்முறையிலும் ஈடுபடலாம் என்ன செய்தாலும் நம்மைக் காப்பாற்ற பா.ஜ.க இருக்கிறது என அவர்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி வருகிறது. சமூக விரோதிகள் வன்முறையாளர்கள் என யாராக இருந்தாலும் அவர்களை அனுமதிக்கக் கூடாது.
ஆளுநருக்கு என்ன வேலை என்று அரசியலமைப்புச் சட்டம் கூறியுள்ளது. அந்த சட்டத்தின் படி அவர் செயல்பட வேண்டும். அதை விடுத்து ஆளுநர் பாஜக தலைவராகச் செயல்படக் கூடாது. ஆனால் அவர் அவ்வாறு தான் செயல்பட்டு வருகிறார். சனாதனம் தான் நாட்டை ஒற்றுமைப்படுத்துகிறது என்று அவர் கூறுகிறார். ஆனால் சனாதனம் தான் மக்களைப் பிளவுபடுத்துகிறது. ஆளுநருக்கு எந்த வாத்தியார் சொல்லிக் கொடுத்தார் என்று தெரியவில்லை" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!