Politics

கொடநாடு விவகாரம்: சிக்கிய விவேக் ஜெயராமன்.. 3 மணிநேர விசாரணையில் நடந்தது என்ன?

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஏற்கெனவே 12 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், கொடநாடு பங்களா தொடர்பாக சசிகலா உறவினரும், ஜெயா டிவி நிர்வாக இயக்குநர்களில் ஒருவருமான விவேக் ஜெயராமனிடமும் தனிப்படை போலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதற்காக சென்னையில் இருந்த விவேக் ஜெயராமனை கோவை உப்பிலிப்பாளையத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு வரவைத்து மூன்று மணிநேரமாக விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது.

அப்போது, ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் இருந்து திருடப்பட்டதாக கைப்பற்றப்பட்ட கிறிஸ்டல் கரடி பொம்மைகளும், கைக்கடிகாரமும் எஸ்டேட் பங்களாவில் இருந்தவைதானா? வேறு என்னவெல்லாம் பங்களாவில் இருந்தது என்ற கேள்விகள் விவேக்கிடம் முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனிடையே ஜெயலலிதாவின் சசிகலா, தினகரன், இளவரசி, விவேக் ஜெயராமன் போன்றோர் கொடநாடு பங்களாவுக்குள் செல்லும் வழக்கம் இருந்ததன் அடிப்படையிலேயே விவேக் ஜெயராமனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், இதனையடுத்து சசிகலா, டிடிவி தினகரனும் விசாரணை வளையத்திற்குள் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் பேசப்படுகிறது. இதன் மூலம் கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் பல முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Also Read: நீடிக்கும் கொடநாடு மர்மம்: தோண்ட தோண்ட அவிழும் முடிச்சுகள்; கொலை கொள்ளைக்கு மூளையாக இருந்த இருவர் கைது!