Politics

நீட் தேர்வுக்கு எதிராக மாநிலங்களை திரட்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; பம்பரமாக சுழலும் தி.மு.க MPக்கள்!

மருத்துவ படிப்பில் சேருவதற்கு நடத்தப்படும் நீட் தேர்வு தி.மு.க ஆட்சிக்கு வந்த பின் ரத்து செய்யப்படும் என தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, முதல் கட்ட நடவடிக்கையாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வின் பாதிப்பை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. சட்டமன்றத்திலும் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதோடு நின்று விடாமல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாஜக ஆட்சியில் அல்லாத 12 மாநிலங்களை நீட் தேர்வுக்கு எதிராக ஒருங்கிணைக்கும் வகையில் ஆதரவு திரட்டி வருகின்றார்.

அந்த வகையில் இன்று (13/10/2021) தி.மு.க மாநில மகளிரணிச் செயலாளரும், தி.மு.கவின் நாடாளுமன்றக் குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை நேரில் சந்தித்து மொழி பெயர்க்கப்பட்ட நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு அளித்த அறிக்கையையும் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி எழுதிய கடிதத்தையும் வழங்கினார்.

இதேபோல, தி.மு.க. செய்தித் தொடர்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவனும், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமியும் ஆந்திரா, கேரளா மாநிலங்களின் முதலமைச்சர்களையும், தெலங்கானா மாநில முதலமைச்சரின் மகனிடத்திலும் நேரில் சந்தித்து நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்திய தமிழக முதலமைச்சரின் கடிதத்தை அளித்திருக்கிறார்கள்.

Also Read: ”5 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை 5 மாதத்தில் செய்ததால் கிடைத்த வெற்றி இது” -முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்