Politics

”குதர்க்கவாதிகள் கிளப்பிய நாற்காலி சர்ச்சை” : முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரும் திருமாவளவனும்!

தமிழ்நாட்டின் போக்குவரத்துறை அமைச்சராக உள்ள ராஜகண்ணப்பனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக கடந்த ஜூலை 31ஆம் தேதி அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்துள்ளார் வி.சி.க தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன்.

அப்போது திருமாவளவன் பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்திருந்த புகைப்படத்தைப் பகிர்ந்து சமூக வலைதளங்களில் சிலர் அவதூறு பரப்பி வந்தனர்.

இதுகுறித்து திருமாவளவன் எம்.பி விளக்கமளித்துள்ளார். அதில், “அமைச்சர் ராஜக்கண்ணப்பன் அவர் அருகில் இருந்த சோஃபா இருக்கையில் அமரும்படி 3 முறை கூறினார். முகம் பார்த்து பேசுவதற்கு வசதியாக நானேதான் பிளாஸ்டிக் சேரில் உட்கார்ந்தேன். இதில் நான் பணிந்து போவதற்கு என்ன இருக்கிறது. கைக்கட்டி அமருவது எனது பழக்கம். என் தாயார் முன்பும், கட்சித் தொண்டர்கள் முன்பும் கைகளை கட்டிக் கொண்டுதான் இருப்பேன். இதில் அரசியல் செய்து சர்ச்சையை கிளப்புகிறார்கள்.

காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள், குதர்க்கவாதிகள் வி.சி.கவின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ளாதவர்கள் இவ்வாறு சேற்றை வாரி இறைக்கிறார்கள். அதனை பொருட்படுத்த மாட்டேன். என் நலனில் அக்கறை கொண்டவர்கள் விமர்சித்தால் பதிலளிக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

அதேபோல இன்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் மேற்குறிப்பிட்ட விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நாங்கள் இருவரும் நீண்டகால நண்பர்கள். பாயில் அமர்ந்தே பேசியிருக்கிறோம். சாதாரண நிகழ்வை பெரிதுபடுத்த வேண்டியதில்லை” எனக் கூறியுள்ளார்.

Also Read: “கட்டணம் உயர்த்தப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை” : OPS பொய் குற்றச்சாட்டு அமைச்சர் ராஜகண்ணப்பன் பதிலடி !