Politics

சுற்றுச்சூழல் அமைச்சகம் கொடுத்த நிதியை வாரி சுருட்டிய அதிமுகவினர் - அமைச்சர் ராமச்சந்திரன் கடும் தாக்கு!

10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் இருந்து பெறப்பட்ட நிதியை, அதிமுக அரசு முறையாக பயன்படுத்தவில்லை என வனத்துறை அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நீலகிரி மாவட்டம் கெந்தொரை கிராமத்தில் இளைஞர் மன்றம் சார்பில் அதன் அமைப்பாளர் திமுக பிரதிநிதி மகேஷ் குமார் தலைமையில் நீலகிரியில் அழிவின் பட்டியலிலுள்ள விக்கி, நாவல், ஆப்பிள் போன்ற அரிய வகை பழ மரங்களை வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் நடவு செய்தார். இதனைத் தொடர்ந்து உதகை அரசு தலைமை மருத்துவமனையில் புதிதாக அமைக்கபட்டுள்ள ஆயிரம் மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்ட ஆக்சிஜன் நிலையத்தை அமைச்சர் ராமசந்திரன் இன்று தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் சார்பாக நல திட்ட உதவிகள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு ஊக்க தொகை மற்றும் கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நல திட்டங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு லட்சத்தி 30 ஆயிரத்து 6 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தமிழகத்தில் 23 சதவித வன பகுதி மட்டுமே உள்ளதாகவும் அதனை 33 சதவிதமாக உயர்த்த வரும் 10 ஆண்டுகளில் 28 கோடி மரங்களை நட இலக்கு நிர்ணயம் செய்யபட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும் 28 கோடி மரக்கன்றுகளை வனத்துறை தனியாக தயார் செய்ய முடியாது என்பதால் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டு வனத்துறை மற்றும் வேளாண் துறை இணைந்து மரக்கன்றுகளை உற்பத்தி செய்யபடும் என்றார்.

நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் காலத்தில் நடப்படுள்ள யூகோலிப்டஸ் மரங்களால் நிலத்தடி நீர் குறைவதால் அந்த மரங்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக பட்ஜட்டின் போது அதற்கான நிதி ஒதுக்க கோரிக்கை வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் ஒவ்வொருவரும் தங்களது பிறந்த நாளன்று ஒரு மரக்கன்றையாவது நடவேண்டும் என்று கேட்டுகொண்டார். அத்துடன் கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் ஒன்றிய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய கோடிக்கணக்கான நிதியில் அதிமுக அரசு பல்வேறு முறைகேடுகள் செய்துள்ளதாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் குற்றம் சாட்டினார்.

தற்போது வனத்துறையை மேம்படுத்த ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் இருந்து நிதியைப் பெற மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் வன விலங்குகளுக்கு உணவு அளிக்கும் நபர்கள் மீது வனத்துறை சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பொன்தோஸ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Also Read: பட்டியலின இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்; புதுச்சேரி பா.ஜ.கவினர் மீது நடவடிக்கை எடுக்காத போலிஸ்!